Monday, 30 March 2020

குலராஜ் எனும் ஓவிய ஆளுமை

குலராஜ் எனும் ஓவிய ஆளுமை


தமிழ் சார்ந்த ஓவியர் குலராஜ்.ஓவியம் தமிழர்கள் மத்தியில் பல்லாயிரம் வருச மரபு சார்ந்ததாக இருந்தாலும் ஓவியம் பற்றி பேசிய தமிழ் ஓவியர்கள் பலர் மேலைத்தேய ஓவியங்களின் வழி வந்தவர்களை மட்டுமே கொண்டாடினர்.தமிழ் மரபு சார்ந்து பேசியோர் மிக மிக குறைவு.நவீன ஓவியம் என பேசியோர் மனதுக்கு உற்சாகம் தராத வண்ணங்களையே பயன் படுத்தினர் ஒருவகையான. அழிந்த வண்ணங்களாய் இருந்தன.தமிழ் மரபு இந்திய மரபு வான வில் போன்ற வண்ணக் கலவை மிக்கது ஒளிரும் வண்ணங்களாய் அவை நம்மை மகிழ்ச்சிப் படுத்தும்.

குலராஜ் நம் மண் சார்ந்த சிந்தனை வயப் பட்ட ஓவியர் ஓவியத்தை உயிராய் நினைப்பவர் ஓவியத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர் அல்ல.தமிழ் நாட்டின் புகழ் பெற்ற தஞ்சாவூர் ஓவியத்தின் சாயலில் ஈழத் தமிழர் பண்பாடு வரலாறு ஆகியவற்றை ஓவியங்ஜளில் கொண்டு வந்தவர் குலராஜ்.
குலராஜ்ஜின் ஓவியங்கள் கிழக்கு மண்ணின் சடங்குகளை பேசின தான் வாழ்ந்த சூழலின் பண்பாட்டை தன் வரை கலையில் கைகளுக்குள் களி நடம் புரிந்தன அவர் ஓவியங்கள்.

நம் கூத்தும் பறை மேளமும் வசந்தனும் கொக்கட்டி சோலையும் தோரணமும் குலராஜ்ஜின் ஓவியங்கள் வழி புது கலா பூர்வமான அர்த்தத்தை பெற்றன.எத்தனை வண்ணம் கொண்டாய் என அதிசயிக்க வைக்கும் ஓவியர் அவர்.

மட்டக்களப்பின் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் அவர் ஓவியங்களின் புதிய அர்த்தம் பெற்றன.நம் மரபின் அடையாளங்களை ஓவியங்களின் வழி உலகுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் குலராஜ்.

மரபு வழி ஓவியத்தை நவீன தமிழ் ஓவிய செல் நெறியாய் மாற்றலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் குலராஜ் அவர்கள்.சுனாமி பற்றிய அவரது ஓவியங்கள் அன்றைய சூழலை.நம் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
ஈழத் தமிழ் நவீன ஓவியத்தின் தமிழ் முகம் குலராஜ்.
ஈழத் தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய நம் ஓவியர் குலராஜ்.அவரது ஓவியக் கண் காட்சிகள் பரவலாய் நடத்தப் பட வேண்டும்.
புலம் பெயர் நாடுகளில் அவரது ஓவியங்களின் கண்காட்சியையும் பயில் அரங்குகளையும் நடத்த முடியும்

வாழ்த்துகள் குலராஜ்

பாலசுகுமார்


ஓவியர் குலராஜின் அண்மைக்கால ஓவியங்கள் இரண்டு
-----------------------------------------------------------------------------
ஓவியர் குலராஜின் அண்மைக் கால ஓவியங்கள் இரண்டைக்காணும் சந்தர்ப்பம் கிடைத்தது
.மனதையும் கருத்தையும் கவர்ந்த ஓவியங்கள் அவை
ஒன்று சக்தி சிவனோடு இணைந்து அர்த்தநாரியாக காட்டும் தோற்றம்
மற்றது அதேசக்தி சிவனை விட்டுபிரிந்து காதலியாக அவருக்கு அன்பு ஊட்டுவதும்,தாயாகி மகனுக்கு பாலூட்டுவதும்
No photo description available.
பெண்மையின் இரண்டு நிலைகள் என தன் கருத்தியலை கலையாக்கியுள்ளார் குலராஜ்
பெணமை இணந்தும் பிரிந்தும் செயற்படும்,அந்தச் செயற்பாட்டில் பல அர்த்தங்கள் இருக்கும்
குலராஜின் சிவன் அல்லது ஆண் என்றும் கரும் பச்சை நிறமானவன்,
அவரது சக்தி அல்லது பெண் சிவந்த நிறமுடையள்
அர்த்த நாரியாகக் காட்சிதரும் சக்தியின் சிவனின் கண்கள் காட்டும் பாவம் வேறு,.
குடும்பமாகக் காட்சிதரும்
சக்தியின்
சிவனின் கண்கள் காட்டும் பாவம் வேறு
முன்னையதில் கொடுமைகளைப் பொசுக்கும் அல்லது அழிக்கும் கோப உணர்வை-ரௌத்ர உணர்வை அக்கண்கள் வெளிப்படுத்துகின்றன
குடும்பப்பெண்ணாகக் காட்சிதரும் சக்தி கணவனை நோக்குகையில் அவள் கண்களிலே காதல் கொப்புளிக்கிறது.
சிவனின் கண்களிலும் அதே காதல் கொப்புழிக்கிறது
. குழந்தையை அணைக்கும் அவளது வலது கரத்தில் பாசம் தெரிகிறது
பாசம் பொழிகிறது
ஆண்களைக் கருமை நிறத்திலும்
பெண்களைச் சிவந்த நிறத்திலும்
படைத்திருக்கிறார் குலராஜ்
ஆணையும் பென்ணையும் குலராஜ் நிறம் கொண்டு வேறுபடுத்துகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது
அதற்கான வலுவான காரணங்கள்
அவரிடம் இருக்கவும் கூடும்
குலராஜுக்கு கிளிகள் மீது ஒருகாதல்
எங்கு நோக்கினும் கிளிகள்
முதல் படத்தில்
அம்மையின் கையிலே கிளி
,இர்டண்டாம் படத்தில்
அம்மையப்பனின் காதலை யும் பாசத்தையும் ரசிக்கும் கிளிகள்
குலராஜின் பாணியலமைந்த கோடுகளும்,வர்ணங்களும் எம்மைக் கவருகின்றன
இந்திய சிற்பங்களில் காணப்படும்
அழகு
,மென்மை
,நளினம்
ஆழம்
என்பன இவ்வுருக்களில் தோன்றி மரபை எமக்கு அழுத்தமாக உணர்த்துகின்றன
நன்றாக உற்றுப்பாருங்கள்
ரசியுங்கள்
இவ் ஓவியங்கள் இன்னும் பல உணர்வுகளைக் கருத்துக்களை உங்களுக்குத் தரக்கூடும்
ஓவியம் பேசுவது என்பது இதுதான்
ஓவியம் பேசாது
,ஆனால் அது நமக்குள் நம்மை பேச வைக்கும்
குலராஜின் இவ் ஓவியங்கள் மரபாகத் தோன்றும் அதே வேளை
நவீனமாகவும் காட்சிதருகிறது
மரபினடியாக இவர் உருவாக்கும் நவீனம் இது
இந்த தனித்துவம்தான் குலராஜிடம் எனக்கு மிகப் பிடித்த அம்சம்
அவர் கால்களும் சிந்தனையும் மிக அழுத்தமாக மண்ணில் ஊன்றி நிற்பதனால் இத்தகைய புதுமைகளை அவரால் படைக்க முடிகிறது
அவரிடமிருந்து நமது ஓவிய மாணவர்கள் கற்பதற்கு நிறைய இருக்கிறது
இந்த மரபுவ்ழி ஓவிய உணர்வையும்,சிந்தனையையும் குலராஜ் மாணவர்க்கு ஊட்ட வேண்டும்
உயர்கல்வி நிறுவனங்கள் அவரை நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்


மௌனகுரு

தர்சி எனும் நர்த்தகி

தர்சி எனும் நர்த்தகி


Image may contain: 2 people
நான் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றிய காலங்களில் விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தவர் சிவ தர்சினி அவர் படிக்கும் காலங்களில் அவரின் திறமை மேடையில் பளிச்சென மின்னும்.பரத நாட்டியம் கதகளி இவற்றில் கற்பனையோடு புத்தாக்க்கம் செய்திறன் வாய்க்கப் பெற்றவர் தர்சி.
ஒரு குழு நடனமாக இருந்தாலும் அதில் அவர் திறமை தனித்து தெரியும் .இன்று உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் நடன ஆசிரியராக இருக்கும் தர்சி தனித்துவமான தன் படைப்புகளால் திருகோணமலை கலை வரலாற்றில் நடன நாட்டியத் துறையில் வித்தியாசமான நடன அளிக்கைகளால் தனி முத்திரை பதிக்கும் ஒருவராக கணிக்கப் படுகிறார்.
Image may contain: 5 people, people smiling அண்மைக் காலமாக அவர் படைப்புகளை வீடியோ வழி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தமை பெரிதும் மகிழ்ச்சிக்குரியது.
வேல் ஆனந்தன் ஆசிரியர் வழியாக கனடாவில் நிகழ்ச்சிகள் செய்து திருமலை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்.
Image may contain: 4 people
இலங்கை இந்தியா புலம் பெயர் நாடுகள் என பல நூறு நடன கலைஞர்களின் படைப்புகளை கண்டு களித்திருக்கிறேன் ஆனாலும் தர்சியின் ஆடலும் அபி நயமும் பாவமும் தனித்து தெரிபவை.
தர்சியின் படைப்புகள் கண்டு மகிழ்வதோடு தமிழர் நடன வரலாற்றில் சாதனைகள் படைக்க வேண்டும் என வாழ்த்தி நிற்கிறேன்
இந்த வேளையில் தர்சியின் தகப்பனார் சுப்ரமணியம் அவர் மனைவி திருமகள் இருவரையும் நினைத்துப் பார்க்கிறேன் .(படங்களுக்கு நன்றி சசிகுமார்)

பாலசுகுமார்


Saturday, 28 March 2020

என்னை ஆராதித்த மட்டக்களப்புத் தமிழகம்

என்னை ஆராதித்த மட்டக்களப்புத் தமிழகம்

மட்டக்களப்பு எனும் பெரு நிலம் வெருகல் தொடங்கி பாணமை வரை நீண்டு தமிழ் கூறும் நல்லுலகம்.

பன்னெடுங்கால பழந்தமிழ் நிலம்.
மட்டக்களப்பு தமிழகம் தனித்துவமான பண்பாடுகளால் ஏனைய தமிழர் பிரதேசங்களிலிருந்து வேறு படுகிறது.பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவதைப் போல மட்டக்களப்பு பண்பாட்டு மானிடவியலாளர்களின் சுரங்கம்.பண்டிதர்.வி.சி.கந்தையா அவர்களின் மட்டக்களப்பு தமிழகம் எனும் நூல் அதன் தனித்தன்மையயை வெளிப் படுத்தி நிற்கிறது.அதேபோல பேரா.மெளனகுருவின் மட்டக்களப்பின் மரபு வழி நாடகங்கள் எனும் நூல் கூத்தும் அதனோடிணைந்த கலைகளையும் நம் முன் கொண்டு வருகிறது.மட்டக்களப்பின் வரலாற்றைப் பேசும் பலர் வித்துவான் கமலநாதன்,விஜயரத்னம் எட்வின்,வெல்லவூர் கோபால்,செல்வி.தங்கேஸ்வரி,
சுவாமி விபுலானந்தர் பண்டிதர் பூபாலபிள்ளை,சோமசுந்தர தேசிகர்,புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை,பண்டிதர் வி.சி.கந்தையா என் நீண்டு செல்லும் அறிஞர் பரம்பரையும் அவர் தம் முதுசங்களும்.
மட்டக்களப்பு எனக்கொரு கனவு தேசம்1961ம் ஆண்டு எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது அம்மாவுடன் முதல் மட்டக்களப்பு விஜயம் அப்புச்சி அப்போது மட்டக்களப்பு சிறையில் ஒரு வழக்கு தொடர்பாய் விழக்க மறியலில் இருந்தார்.இன்னமும் மாறாத நினைவு அது .
தொடர்ந்து வெருகல் திருவிழா போகும் போதெல்லாம் வெருகல் ஆற்றைக் கடந்து மட்டக்களப்பின் எல்லையயை தொட்டு நாவல் பழம் ஆய்ந்து தாமரைக்காய் பறித்து அங்கு பூத்திருக்கும் அல்லிப் பூவில் மயங்கிய நாட்கள்.வெருகலுக்கு வரும் மட்டக்களப்பின் பூந்தி கடைகளின் வாசமும் ருசியும் மனதை மயக்கும்.
அப்புச்சி அடிக்கடி சொல்வார் கல்லாத்தில் சொந்த காரர்கள் இருப்பதாக.எங்கள் ஊரில் சின்ன மட்டக்களப்பு என்ற இடமே உள்ளது அந்தளவுக்கு மட்டக்களப்புக்கும் எங்களுக்கும் நெருங்கிய தொடர்பு.ஆனாலும் எனக்கு மட்டக்களப்பு ஒரு கனவாகவே இருந்தது.
1971ம் ஆண்டு எங்கள் சேனையூர் மகாவித்தியாலய முதல் சுற்றுலா
அதிபர் கணேஸ் மாமா ஏற்பாடு செய்தார் என்னிடம் பண வசதியில்லை ஆனாலும் எனக்குரிய சுற்றுலா பணத்தை கணேஸ் மாமாவே கட்டினார்.அற்புதமான பயணம் அது.இலங்கை முழுவதும் சுற்றிப் பார்த்தோம்.மட்டக்களப்பில் வாழைச்சேனை கடதாசித்தொழிற்சாலை ,மட்டக்களப்பு நகரம் எங்கள் கண்களில். சித்தாண்டி கந்தலிங்கம் அய்யா வீட்டில் சாப்பாடு புட்டும் தயிரும் மறக்க முடியா மண் மறவா சாப்பாடு.என்னுள் மட்டக்களப்பு பற்றிய கனவை மேலும் மெருகூட்டிய பயணம் அது
1977யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மட்டக்களப்பிலிருந்து பலர் வந்து சேர்கின்றனர்.எல்லோரும் நண்பர்களாகின்றனர்.1978 புயல் பல்கலைக்கழகமிருந்து முதல் குழுவாக திருகோணமலையிருந்து
கடல் பயணம் மட்டக்களப்பு கல்லடியில் நிவாரணப் பொருட்களுடன் இறங்க ஏனையவர்கள் தரை மார்க்கமாக மட்டக்களப்பு வருகின்றனர் புயல் பாதித்த வாகரையிருந்து அக்கரைப்பற்று வரை எங்கள் பயணம் நிவாரணப் பணிகளில் நாங்கள்.
கனவு தேசமான மட்டக்களப்பு சிதைந்து சின்னாபின்னமான காட்சிகள்.
பின்னர் அடிக்கடி நண்பர்களுடன் மட்டக்களப்பு நோக்கிய பயணங்கள் எங்கள் சக மாணவி சந்திரமணியின் பாட்டி மரண வீடு காரைதீவு சென்றமையும்,காரைதீவு கண்ணகி ,விபுலானந்தர் இல்ல தரிசனம் என என் கனவின் மீதி நிஜமாகிய நாட்கள்.
பின்னய விடுமுறை நாளில் நண்பர்களுடன் சம்மாந்துறையில் மன்சூர் ஏ காதர் வீடும் அவர்கள் ஆற்றில் குளித்ததும் அடுத்த நாள் கல்முனைக்குடியில் எச்.எம் பாறுக் வீட்டுச்சாப்பாடும் எங்கள் ஆசான் பேராசிரியர் நுஹ்மான் வீட்டுக்கு சென்று வந்தமையும் சந்தோசப் பொழுதுகள்.
வாழைச்சேனை ராஜ்குமார் வாகரை கபிரியல் மாஸ்ரர் மகள் மட்டக்களப்பு ராஜலட்சுமி,ரூபி,பாண்டிருப்பு தவமணி,ஜெயந்தி,குருமண்வெளி பாக்கியராஜாஇன்னும் பல நண்பர்கள். என நண்பர் நண்பிகளின் சந்திப்பு.
ஈழப் புரட்சி அமைப்பாய் இயங்கிய போது காத்தான்குடி கபூர்,மட்டக்களப்பு பொன்னம்பலம் கஜன்,கிருபா என எத்தனை தோழர்கள்.
திருமணம் மட்டக்களப்புக்கே நான் மருமகனாதல் குருமண்வெளியூர் சோமசுந்தர தேசிகர் பேத்தி என் மனைவியாக வந்தமை மட்டக்களபினூடான என் பந்தத்தை உறவு ரீதியாக உறுதிப் படுத்தியது.
1991ல் நான் திருகோணமலை மேற்கு தமிழ் வித்தியாலைய பிரதி அதிபராக இருந்தேன் அப்போது மாகாண மட்ட தமிழ்தின போட்டிக்காக வந்த போது 1978புயலின் அழிவிலிருந்து மீண்டு மீண்டும் தன்னை தகவமைத்துக் கொண்ட மட்டக்ககப்பு அழிந்து கிடந்த அவலம் 1990ல் யுத்தத்தின் கோரம் திண்று துப்பியிருந்தது என் மனம் துணுக்குற்று அழுத நாட்கள் அவை.தமிழ் தின போட்டியில் இசைநாடகத்துறையில் முதல் பரிசைப் பெற்றோம்.பின்னர் அந்த நாடகம் அகில இலங்கை மட்டத்திலும் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத் தக்கது.அந்த நாடகத்தை நானே எழுதி இயக்கியிருந்தேன்.
கூத்தும் இசையும் கும்மியும் வசந்தனும் பறைமேளமும் சொர்னாளியும் சடங்கும் கண்ணகை அம்மனும் நம்மை களி கொள்ள வைக்கும் தருணங்கள்

பாலசுகுமார்

கிராமம் எங்கும் வீசிய அக்கினிச் சுவாலை வில்லுப்பாட்டு வீரசிங்கத்தார்

கிராமம் எங்கும் வீசிய அக்கினிச் சுவாலை
வில்லுப்பாட்டு வீரசிங்கத்தார்
---------------------------------------------------
குடத்துள் விளக்கு, குன்றின் மேலிட்ட தீபம் என இரு சொற்றொடர் தமிழில் உண்டு.
குடத்துள் விளக்கு என்பதன் அர்த்தம் குடத்துக்குள் மற்றவர்க்குத் தெரியாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்கு என்பதாகும்.

குன்றின்மேலிட்ட தீபம் என்பது மலைக்குமேலிருந்து அனைவரும் காண ஒளி வீசும் விளக்காகும்
.ஒன்றை விளக்கு என்பர்
மற்றதைத் தீபம் என்பர் ,
இந்தச் சொற் பிரயோகத்தைக்கவனிக்க வேண்டும்
விளக்கு எனும் சொல் தீபம் என்பதைவிடக் குணாம்சத்தில் சற்றுக் குறைவுடையதாயினும் இரண்டிலும் காணப்படுவது நெருப்பு,அது சார்ந்த ஒளி எனும் பொதுப்பண்பே
குடத்துள் விளக்காக இருந்து மறைந்து விடும் கலைஞர்களுமுண்டு
.
குன்றின் மேல் தீபம் என ஒளிர் விடும் கலைஞர்களுமுண்டு
கொட்டியாரப்பற்றில் உதித்து அங்கு புகழோடு வாழ்ந்த வீரசிங்கத்தை நாம் இதற்குள் எதற்குள் அடக்கலாம்?
விளக்கா?
தீபமா?
அவரது வாலாயமான துறை அவரைப் பிரபல்யப்படுத்திய துறை வில்லுப்பாட்டுத்தான்
,அவரது சிறப்பான வில்லுபாட்டிற்கு அவரது இனிமையான குரல் திறனும்,நடிப்புத் திறனும் பாட்டுக்கட்டும் திறனும் உறுதுணையாக இருந்துள்ளன
நான் அவரது வில்லுப்பாட்டினைக் கேட்டதில்லை.
ஆனால் பால சுகுமார் அவர் திறனை என்னிடம் வெகுவாகச் சிலாகிப்பார்
அவரது வில்லுப்பாட்டில் மக்கள் கிறங்கிப்போய் இருப்பர்களாம்
பால சுகுமாரின் மகள் அனாமிகாவின் நினைவு நாள் ஒன்றில் வீரசிங்கம் தானே ஒரு பாட்டுக்கட்டி அதற்குத் தானே இசையமைத்து உடனே பாடினார்’
அவர் திறனை நேரடியாகத் தரிசித்த கணங்கள் அவை
சிறப்பான சொற்கள்,
கணீர் என்ற குரல் வளம்
பாவம்,அசைவு கமகம் நிறைந்த இசை
உள்ளத்து உணர்ச்சிகளை அப்படியே காட்டும் அவரது முகபாவம்
அனைத்தும் அப்பாடலைப் பாடும்போது தெரிந்தன
அவர் குரல் நடித்தது
அவர் வில்லுப்பாட்டு எத்தனை சிறப்பாக இருந்திருக்கும் என்பதை பதச் சோறாகக் காட்டிய நிகழ்ச்சி அது
அவர் ஊரில் ஒரு வைத்தியர்
அத்தோடு ஒரு மந்திரவாதி,
ஊர்க்கோவில் பூசாரியார்.
தெய்வங்களுக்குரிய கிராமிய மெட்டில் அமைந்த அம்மானை,கும்மி பாடல்களை அழகாகப்பாடும் ஓர் இசைகலைஞர்
இத்தனைக்கும் மேலால் .ஒரு மேடை நாடக நடிகர்
பூசாரியார் குரல் வளமும்,நடிப்புத் திறனும் கொண்டவராக இருந்து விட்டால் பூசாரித்தனம் மேலும் சுடர் வீட்டு பிரகாசிக்கும்.
மந்திர உச்சாடனங்களைத் தெளிவாகச் சொல்லி உருவேற்றும் பூசாரிகள் மீது தெய்வம் ஏறி உருக்கொண்டு ஆடுவோருக்குப் பெரு விருப்பு ஏற்படும்,மக்களிடையே அவருக்கு மிகுந்த மரியாதையும் இருக்கும்
தெய்வம் ஏறி ஆடுவோரிடமும் மக்களிடமும் பெரு மதிப்பும் மரியாதையும் பெற அவரிடம் காணப்பட்ட இத்திறன்களே காரணமாகும்
வீரசிங்கத்தாருக்கும்
பூசாரித்தனமும்
குரலும் குடும்பமுதுசம்
அவரது தந்தையாரும் ஓர் பூசாரியே அண்ணனாரும்
ஓர் பூசாரியே.
தன் இளம் வயதிலிருந்தே அவர்கள் அருகிலிருந்து இக்கிரியைகளைப் பார்த்து வளர்ந்தவர் விஸ்வலிங்கம் என அறிகிறோம்,
கிராமக் கோவில்களில் மடை வைத்தல் என்பது முக்கியமான ஒருகிரியை\
.மடை வைக்கும் முறை பல வகைப்படும்.
வெற்றிலை,கமுகம் பாளை,வாழைப்பழம்,வேப்பிலை பலவித பல வித பூக்கள் பொங்கல் கொண்டு அமைக்கப்படும் இம்மடைகள் மடை அமைப்போரின் திறனுக்கும் கற்பனைக்கும் ஏற்ப அலங்காரமாக அமையும்.
மடை கிராமக் கோவில்களின் ஓர் அடையாளம்
ஒரு வகையில் இது அடுக்குச் சாத்துதலுக்கு நிகரானது
.
ப்ல்வேறு
பூக்களையும்
இலைகளையும்
சேலைகளையும் இணைத்து அம்மன் முகக்களைக்குஅல்லது தெய்வச் சிலைகளுக்கு அடுக்குச் சாத்துவர் பூசாரிமர்
இது பெரும் கோவிகளில் சாத்துப்படி எனவும்
வழங்கப்படும்,அங்கு இதனைச் செய்பவர்கள் அங்கு பூசை புரியும் பிராமணர்களே
இது அவர் அவரவர் அனுபவத்தையும் கற்பனையும் பொறுத்துள்ளது
வீரசிங்கத்தார் மடை வைத்தலில் ஒரு தேர்ச்சி பெற்றவராகத் திகழந்தார் என அறிகிறோம் அவர் வைக்கும் மடைகள் தெய்வம் ஏறி ஆடுவோரைக் குளிர வைக்கும், பக்தர்களின் கண்களை விரிய வைக்கும் .
குலவித்தை கல்லாமல் பாகம் படும் என்பார்கள்.
சிறு வயதிலிருந்தே தந்தை அண்ணன் வைத்த மடைகளைப்பார்த்து வளர்ந்த இவர் அவர்களையும் விடச் சிறப்பான மடைகள் வைத்தார் என அறிகிறோம் அவர் வைக்கும் காத்தவராயர் மடை வீரபாகு மடை என்பன முக்கியமும் பிரசித்தமும் வாய்ந்தவை.
இவற்றை அழகாகவும் சிறப்பாகவும் செய்யக்கூடிய ஒரே ஒரு பூசாரி என்ற பெயரையும் அவர் கிராமத்தில் பெற்றிருந்தார்
வீரசிங்கத்தாரின் இரத்தம் நாடி நரம்பு சதைகள் எல்லாம் இந்த மந்திரம் கிரியைகள் மடை வைத்தல் என்பன ஊறிக்கிடந்தன
,
வீடுகள் தோறும் நடக்கின்ற கும்பம் வைத்தல்,பத்தினிஅம்மன் வேள்வி,, வீரபத்திர வேள்வி மற்றும் கிராமத்தின் வீடுகள் தோறும் நடக்கின்ற கரையல் படையல் ஆகியவற்றில் ஊரவரின் பெரு நம்பிக்கைக்கும் அபிமானத்திற்குமுரியவராக இருந்தார்
கிராமத்து நாடக மன்றங்களுக்குக் கிரமத்தில் ஓர் தனி மவுசு உண்டு
,கிராமத்து நாடகங்களில் புகழ்பூத்த ந்டிகனாக வலம் வந்தார் என அறிகிறோம்,
இவரது பாட்டுத் திறனும் நடிப்புத் திறனும் கற்பனைத்திறனும் நல்லதோர் ந்டிகனாக வர இவருக்கு உதவின
வில்லிசையே இவரின் அடையாளமாயிற்று
வில்லிசை வீரசிங்கம் என்ச்ப் பிரபல்லியம் பெற்றார்
இத்திறமையினால் பட்டங்கள் பலவும் பெற்றார்
.வில்லுப்பாட்டில்
தமிழுணர்வுக் கருத்துக்கள்,
சமூக முன்னேற்றக் கருத்துக்கள்
சீர் திருத்தக் கருத்துக்கள் என்பனவற்றை பாடி அவற்றை மக்கள் மத்தியில் விதைத்து ஒரு சமூக நலனாட்டக் கலைஞராகப் பிரகாசித்தார்
அப்பிரகாசம் அண்மையில் அடங்கி விட்டது
வீரசிங்கத்தார் குடத்துள் விளக்கா?
குன்றின் மேலிட்ட தீபமா?
அக்கினிக்குஞ்சின் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ? எனக் கேட்டான் பாரதி
வீரசிங்கத்தார் கிராமத்தில் வாழ்ந்த ஒரு அக்கினிக் குஞ்சு
,அதன் சுவாலை கிராமம் ந்கரம் எங்கு வீசியது
நாம் அவரைக் கிராமம் எனும் குன்றின்மேலிட்ட தீபம் என அழைக்கலாம்
மௌனகுரு

மண் சுமந்த மா கலைஞன் செல்லையா அண்ணாவியார்

மண் சுமந்த மா கலைஞன்
செல்லையா அண்ணாவியார்

பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களது முகநூல் பக்கத்தில் செல்லையா அண்ணாவியார் பற்றிய பதிவொன்றை வாசித்தமை இன்று வரை அந்த பாதிப்பிலிருந்து விடு படாமல் மனம் என்னவோ செய்து கொண்டிருக்கிறது.

அழுதும் அது வடிகாலாய் அமையவில்லை.
செல்லையா அண்ணாவியார் ஈழத்து கலையுலகம் காலம் தோறும் கொண்டாட வேண்டிய கலைஞன்.அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற மகிழ்வோடு அவர் என்ன செய்ய்தார் என்ற கேள்வியும் பலருக்கு எழலாம்.

பேராசிரியர் வித்தியானந்தனின் கூத்து மீட்டுருவாக்க செயல் நெறிக்கு நிகழ்த்துகை உருவம் கொடுத்தவர் நம் அண்ணாவியார்.அறுபதுகளில் ஓங்கி ஒலித்த கூத்து மீளுருவாக்க செல் நெறியில் மத்தளமும் தன் குரலுமாக பேராதனையில் தமிழின் தனித்துவ கலாசார மரபின் கம்பீரம் மிக்க கலைஞனாய் உலா வந்தவர்.

தொண்ணூறுகளில் நான் கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளரான பின் அதுவும் 1995ல் கலை கலாசார பீடம் வந்தாறுமூலைக்கு இடம் மாறிய பின் அவருடனான தொடர்பு மிக நெருக்கமாகி என் பாட்டனை பார்ப்பது போன்ற உணர்வு கலந்த நாட்கள் அவை.

அடிக்கடி பேராசிரியர் மெளனகுரு சேரை பாக்க வரும் செல்லையா அண்ணாவியார் எனக்கும் நெருக்கமானார்.அவருடனான உரையாடல்கள் நீண்டன பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தனுடன் கூத்துப் பழக்கிய நாட்களையும் பேராசிரியர் சிவத்தம்பி ,பேராசிரியர் கைலாசபதி ஆகியோருடன் கொண்ட மதிப்பையும் பேசி பேசி மகிழ்ச்சி கலந்த நாட்களை ஒரு குழந்தையை போல கொண்டாடி மகிழ்வார்.
பல வேளைகளில் மத்தளத்தை தூக்கிக் கொண்டு பல்கலைக் கழகத்திற்கு வந்து விடுவார் எங்கள் துறை வாசலில் பசுமையாய் படர்ந்த வேப்ப மர நிழலில் படிக் கட்டில் அமர்ந்து மத்தளம் வாசித்து ராசணேசன் வரவுப் பாடலை பாடி மத்தளம் அடித்த அந்த நினைவுகளில் நான் இப்போது நினைத்தாலும் கரைந்து போகிறேன்.

அவர் எனக்கு அறிமுகமாகும் போது ஒரு ஏழைக் கலைஞனாகவே அறிமுகமானார் அவ்வப் போது என்னால் முடிந்த உதவியை செய்து கொண்டே இருந்தேன் அவர் எப்போது வந்தாலும் வெறுங் கையோடு அனுப்பியது கிடையாது.

நான் இலங்கை நாடகக் குழு உறுப்பினராக இருந்த காலத்தில் ஒரு தொகைப் பணத்தை உதவித் தொகையாக பெற்றுக் கொடுக்க முடிந்தமை மனதுக்கு திருப்தியாய் அமைந்த தருணம் அது.

உலக நாடக விழா நடை பெறும் காலங்களில் அவர் வரவு எங்களுக்கு உற்சாகத்தை தந்தது.நுண்கலைத் துறை வழங்கும் தலைக்கோல் விருதும் ஒரு தொகைப் பணமும் கொடுத்து கெளரவித்தோம்.

அவர் மரணம் அவர் வாழ்ந்த சிறிய குடிசையிலேயே முடிந்து போனது அவருக்கான இறுதிச் சடங்கில் கலந்து கொண்டமையும் அஞ்சலி செலுத்தியமையும் பல்கலைக் கழகத்தின் சார்பில் உரிய மரியாதை செலுத்தியமையும் இன்றும் ஈரம் கசிந்த நினைவுகளாய்.
நான் பீடாதிபதியாக கடமையாற்றிய நாட்களில் எங்கள் பீடத்துக்கான கலை அரங்கு ஒன்றை கட்டுவதற்கான அனுமதியைப் பெற்று கட்டத் தொடங்கி இருந்தேன் அந்த அரங்கிற்கு செல்லையா அண்ணாவியார் பெயர் வைக்க நினைத்திருந்தேன் ஆனால் அது முடியு முன்னே நான் புலம் பெயர வேண்டியதாய் ஆயிற்று.

அந்த மா கலைஞனை கொண்டாடும் விதமாக அவர் நினைவுகளை மீட்டெடுக்கவும் ஒரு ஆவணமாகவும் அடுத்த சந்ததிக்கு கையளிக்கவும் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு கெளரவிக்க வேண்டும்.
இந்த முயற்சிக்கு நம் கல்வி உலகம் முன் வர வேண்டும்

கலா பூசணம் கலா வித்தகர்செ.விபுணசேகரம்


கலா பூசணம்
கலா வித்தகர் செ.விபுணசேகரம்

என் இடை நிலக் கல்வியின் பாடசாலை நாட்களில் வழிகாட்டியாய் என் ஆதர்ச ஆசானாய் என் கை பிடித்து நல் வழி காட்டிய ஆசான் சேனையூர் மத்திய கல்லூரியில் அவர் கற்பித்த நாட்கள் மறக்க முடியாதவை.
தமிழும் சமய பாடமும் அவர் நாவில் கொஞ்சி விளையாடும் அவர் சமய பாடம் படிப்பிக்கும் அழகே தனிச் சிறப்பு வாய்ந்தது.தேவாரம் ,திருவெம்பாவை இசையோடு பாடி தனி அர்த்தத்துடன் எங்கள் செவிக்கு விருந்தாகவும் அறிவுக்கு ஆழமாகவும் செறிந்து நின்ற செம்மையான கல்வி அனுபவம்.
அவர் கற்பித்தலில் பதியமிட்ட திருவருட் பயன் இன்னமும் மாறாத நினைவுகளாய் உள்ளன
''கண்டவற்றை நாளும் கனவில் கலங்கிடும்
திண்டிறலுக்கு ஏதோ செயல்''
என வரிசையாய் எல்லாப் பாடல்களும் மனப் பாடமாய் அதன் பொருளும் .
எனக்கு முதன் முதல் சங்கீதத்தை அதன் நுட்பங்களை அறிமுகப் படுத்தியவர் இசையின் மீதான காதல் அங்கிருந்துதான் அர்த்தமுள்ளதாய் மாறுகின்றது
''கானரீங்காரம் செய்யும் கரு வண்டே நீ
தேனூறும் வாயாலே தில்லை நாதனிடம்
என்னிலை சொல்லு நீ ''
என்ற தமிழ் கீர்த்தனை இப்போதும் என் இசைக்கான அடிப்படை அறிவாய் நீண்டு நிற்கிறது.
சமூகம் கலை இலக்கியம் அரசியல் என தன் பங்களிப்பை தான் வாழும் சமூகத்துக்கு முக்கிய பங்காற்நிலையம்,
கட்டைபறிச்சான் சிறி முருகன் இசைக்கழகத்தை ஸ்தாபித்து அதனூடாக பல இசைக் கலைஞர்களையும் உருவாக்கி ஊக்கப் படுத்திய இசையாளன் .ஆர்மோனியத்தை அழகுற வாசிக்கும் ஆற்றலாளன்.
கட்டைபறிச்சான் சிறிமுருகன் விளையாட்டுக் கழகத்தின் மிகச் சிறந்த கரப் பந்தாட்ட வீரர்களில் ஒருவர்.கட்டைபறிச்சான் சிறிமுருகன் சன சமூக நிலையம்,கட்டைபறிச்சான் இந்து இளைஞர் மன்றம் ஆகியவற்றில் தீவிர செயல்பாட்டாளனாய் இயங்கி சமூக வழிகட்டியாய் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் விளங்கியவர்.
கட்டைபறிச்சானில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் திருமிகு செல்வராஜா அவர்களின் மகனாக அண்ணாவியார் மரபின் ஒரு கண்ணியாக கருவிலே திருவுடையாராக பிறந்து கல்விப் புலத்தில் புகழ் பூத்த பாராட்டுக்களை பெற்றவர்.
ஆசிரியராக அதிபராக கல்வியதிகாரியாக பணியாற்றி இன்றும் தன் தமிழ்ப் பணியை கைவிடாது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருபவர்.
கொட்டியாரத்தின் முதல் இளம் சைவப் புலவராகவும் கலாபூசணம் ,ஆளுனர் விருது,வித்தகர் விருது என பல விருதுகள் பெற்று தான் வாழும் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்
என் ஆசானுக்கு வாழ்த்துகளோடு நான்.
ஒரு மகா கலைஞனை ஆளுமையை வாழ்த்துவோம்

பாலசுகுமார்

Thursday, 26 March 2020

கும்பம் என்பதோர் பெரு விழா

குலசேகரப் பட்டினம் முதல் சேனையூர் வரை

கும்பம் என்பதோர் பெரு விழா

சேனையூர் ஈழத்தின் கிழக்குக் கரையில் தமிழ் வளம் செழித்து கலைகளின் ஊற்றாய் மரபு வழி பண்பாட்டு புதையலை தனகத்தே கொண்ட தொன்மையுறு முது தமிழ் கிராமம் .
தென் ஆசிய பண்பாட்டில் முக்கிய இடம் பெற்ற பெண் தெய்வ வழி பாடு மாரியம்மனாய் வளத்துக்கும் செழிப்புக்குமான குறியீடாய் வழி வழியாய் தொடரும் கலாசார அடையாளத் தொன்மமுமும் சடங்குமாய் தொடரும் மரபார்ந்த நிலத்திடை வாழ்வு.
தமிழ் நாட்டின் தென் கோடியில் உள்ள குலசேகரப் பட்டினம் இன்று கொண்டாட்டத்தில் கலைகளின் சங்கமமாய் தமிழ் மக்கள் திரளில் குதுகலித்திருக்கிறது உலகம் முழுவதும் இருந்து இந்த விழாவை காண மக்கள் கூடியிருக்கின்றனர் .ஒன்பது நாள் தொடர்ச்சியின் பத்தாம் நாள் விழா இன்றும் நாளையும் .நாளை முடியும் போது அடுத்த வருசம் வரை அதற்காய் ஏங்கும் மனத்தோடு விடை பெறும் கலாசாரத் தொடர்ச்சி.
சேனையூரும் கும்பமும் கும்பத்து மாலும் இதனோடு தொடர்பு பட்டு நிற்கிறது எங்கிருந்தோ ஒரு வேர் தென் ஆசிய மரபோடு சேனையூரையும் இணைத்து நிற்கிறது.
கும்பம் சேனையூருக்கு பெருமை சேர்க்கும் ஒரு பண்பாட்டியல் விழா வருசம் முழுவதும் உழைப்பின் களைப்பில் இருந்தவர்களுக்கு ஒரு மன விடுதலையாய் தங்களிடம் இருந்த குரூரங்களை களையும் சடங்காக கனிந்து கிடக்கிறது .இத்தகைய சடங்குகள் உலகின் தொல் குடிகள் எல்லாவற்றிலும் காணப் படுகின்றன.
கும்பம் பல் வேறு சமூக உளவியல் சார்ந்து அதனோடு தொடர்புடைய மனித வாழ்வை பிரதி பலித்து நிற்கிறது.மனித வாழ்வில் ஏற்படும் உணர்வுகளுக்கு வடிகாலாய் அமைந்து வழிப் படுத்தி செல்கிறது.
கும்பம் ஆடுபவர்களின் மனம் மகிழ்வின் பூக்களைச் சுமந்து ஆட்டமும் பாட்டுமாய் கடந்து போக வாழ்வை எதிர் கொள்ளலில் உள்ள சிக்கல்களுக்கு ஒரு தீர்வாய் அமைகிறது. சடங்காகவும் கலையாகவும் ஒரே நேரத்தில் இரு நிலைகளில் ஒரு பண்பாட்டு பெரு விழாவாக சேனையூருக்கு பெருமை சேர்க்கும் கும்ப விழா.