Monday 13 September 2010

திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை

திருகோணமலை தமிழ் அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் 1863 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 24 ஆம் நாள் பிறந்தார்.இன்று அவரது பிறந்த தினம். யாழ்பாணத்துக்கு ஆறுமுகநாவலர், மட்டக்களப்புக்கு விபுலானந்தர், திருகோணமலைக்கு யார் எனக்கேட்டால் கனகசுந்தரம்பிள்ளை என்பதே பதிலாயமையும். தமிழ் நாட்டுக்கு தமது பதினேழாவது வயதில் சென்று அங்கு அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்விமானாக அவர் திகழ்ந்தார். திருகோணமலை அரச உத்தியோகத்தரான தம்பிமுத்துப்பிள்ளை அவர்களின் மகனான அவர் திருமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார். பதினான்கு வயதுக்குள்ளாகவே மும்மொழிகளிலும் செறிந்த அறிவினைப் பெற்றார். மறைசை அந்தாதி, திருவாதவூரடிகள் புராணம் முதலிய நூற்களுக்கு பொருள் விளக்கத்தக்க அறிவையும் பெற்ற அவர் நிகண்டு, நன்னூல் ஆதியனவற்றிலும் சிறந்த அறிவுடன் திகழ்ந்தார்.

நல்லோன்;;;;;; கனகசுந்தரன்

என்றும் எழிலுடன் எங்கள் தமிழன்னை
நின்று நிலவ நிறைதமிழில் - ஒன்றுதிருக்
கோணா மலைக்கான சுந்தரன் மாண்பணியை
ஏணாகக் கொள்வோம் எடுத்து.

கற்றுமிக வாய்ந்து கனகசுந்த ரன்திறனில்
உற்ற தமிழ்ச்செய்திப் பெற்றிதனை - நற்றமிழர்
பற்பலர் கொண்டனர்காண் பைந்தமிழ்ச் சீரினுக்கே
பொற்பாய் மிளிர்ந்த தமிழ்.

ஏடுகளிற் ஏறி எழிலாக வீற்றிருந்த
பீடுதமிழ்த் தெய்வத்தைப் புத்தகமாய் - நாடுகளில்
பல்லோர் பகர்ந்தேத்தப் பாங்காய்ப் பரிந்துழைத்தான்
நல்லோன் கனகசுந்தரன்.

எழுத்தியலும் சொல்லியலும் ஏடுகளில் தேர்ந்து
வழுக்களைந்து வான்தமிழை வாரி - வழங்கியதால்
கற்றார்உள் ளத்தில் கனகசுந்தரன் நின்றான்
கொற்றத் தமிழனவன் காண்.

அன்னை தமிழுக்கே ஆய்ந்தழகு தான்செய்தான்
உன்னுந் திருக்கனக சுந்தரன் - முன்னாள்
இவர்போல் தமிழ்ப்பணி ஈழநன் னாட்டார்
தவமாய்த் தழுவல் தகும்.

_புலவர் நா. சிவபாதசுந்தரனார்.

தி.த.காவின் பதிப்பு முயற்சிகளை பின் வருமாறு குறிப்பிடலாம்:
1. தொல் - எழுத்ததிகாரம் - நச்சினார்கினியர் உரையுடன்
2. தொல் - சொல்லதிகாரம்
3. கம்பராமாயணம் - பாலகாண்டம்
4. தமிழ் நாவலர் சரிதம்

1.தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து வெளியிட விரும்பிய கனகசுந்தரம் பிள்ளை அவர்கள், ஏட்டுப்பிரதிகள், அச்சுப் பிரதிகள் பலவற்றையும் சேர்த்தெடுத்து அவற்றை ஆராயும் பணியில் ஈடுபட்டார். முதலில் எழுத்ததிகாரப் பணியை மேற்கொண்டார். ஏட்டுப்பிரதிகளையும் நூற் பிரதிகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து சூத்திரங்கள் சிலவற்றில் காணப்பட்ட பிழைகளையும் திருத்தியும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட உதாரணச் செய்யுள்கள் எந்தெந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவென எடுத்துக்காட்டியும் பிள்ளையார் அவர்களால் தயாரிக்கப்பட்ட நச்சினார்க்கினியர் உரையுடன் எழுத்ததிகாரத்தை திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. மேற்படி கழகம் அந்நூலுக்கு எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையுடன், திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை B.A அவர்கள் பல ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு செய்து வைத்திருந்த திருத்தங்களுடன் பதிபிக்கப்படுகிறது".

2.தொல்காப்பியம் - சொல்லதிகாரம்
தொல் - சொல்லதிகாரம், பிள்ளையவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது.

3.கம்பராமாயணம் - பாலகாண்டம்
பிள்ளையவர்கள் சுண்ணாகம் குமாரசுவாமி புலவருடன் சேர்ந்து நம்பியகப் பொருளுக்கு ஒரு அரிய உரையை எழுதி வெளியிட்டும், கம்பராமாயணத்தை பிழையறப் பரிசோதித்து கூடிய மட்டில் ஏட்டுப்பிரதிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கிச் சுத்த பாடம் கண்டு முழுவதையும் அரும்பதவுரையுடன் அச்சிட முயன்று முதலில் பாலகாண்டத்தை அவ்விதம் வெளியிட்டனர். அயோத்திய காண்டத்துக்கு அரும்பதவுரை பூர்த்தியாகும் முன்பே இவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தனர்.மேற்கூறிய பாலகாண்டப்பதிப்புப்பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை "...ஆறு காண்டங்களுள் சுண்ணாகம் குமாரசுவாமிப்பிள்ளையும், தி.த.கனகசுந்தரம்பிள்ளையும் பதிப்பித்த 'பாலகாண்டம்' ஒன்றே இன்றுவரை சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது" என்று கூறியுள்ளார். இது வசிட்டர் வாயிலிருந்து வந்த கூற்றல்லவோ!

4.தமிழ் நாவலர் சரிதை -1921-
இந்நூலினை இயற்றியவர் யாரென்பது தெரியவில்லை.எனினும் தமிழ் புலவர் வரலாற்றினைக் கூறப்புகுந்த முதல் நூல் எனப்பெருமை பெற்றது. கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய பல்வேறு தமிழ் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினைக்கூறும் இந்நூலில் வரும் பாடபேதங்கள், பிரதிபேதங்கள், புதிதாகப் புகுத்தப்பட்ட பாடல்கள் ஆதியனவற்றையும் புலவர்கள் காலம், அவர்களின் பாடல்கள் முதலியனவற்றையும் ஆராய்ந்து பிள்ளையவர்கள் தாம் திருத்தித் தயாரித்த நூலை 1921 இல் வெளியிட்டுள்ளார். தமிழ் நாவலர் சரிதையை நாராயணசாமி முதலியார் என்பார் ஏற்கனவே 1916 இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்

No comments:

Post a Comment