Thursday 3 April 2014

அன்புமணி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி-01 கிராமத்தில் வசித்த நாகலிங்கம் அவர்கள் வைரமுத்து இராசையா, பொன்னர் தங்கப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராவார். மட்டக்களப்பு ஆரயம்பதி இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியையும், இடைநிலை, உயர்தரக்கல்வியை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பெற்றார். இலங்கை நிர்வாகசேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியான இவரின் மனைவி பார்வதி நாகலிங்கம். இவர் இளைப்பாரிய கல்லூரி ஆசிரியை. பிள்ளைகள்: நா.அன்புச்செல்வன், நா. அருட்செல்வன், நா. சிவச்செல்வன், நா. தீரச்செல்வன, நா. பொன்மனச் செல்வன், நா. பூவண்ண செல்வன்

1952ல் கல்வித்திணைக்கள இலிகிதராக தனது தொழிலை ஆரம்பித்து 1981ல் இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட். கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து ஆளுநர் செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளராகப் பணிபுரிந்தார். ஓய்வு பெற்ற பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் அவர்களின் செயலாளராக பணியாற்றினார்.

இராசையா நாகலிங்கம் ‘அன்புமணி’ எனும் புனைப்பெயரிலே அறிமுகமானவர். இவரின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் இந்தியாவிலிருந்து வெளிவரும் கல்கி இதழில் 1954இல் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் மற்றும் இலங்கை வானொலி போன்றவற்றிலும் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன. அன்புமணி, அருள்மணி, தமிழ்மணி ஆகிய பெயர்களிலும் எழுதியவர்.

இவரால் இதுவரை சுயமாக ஏழு புத்தகங்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.

இல்லத்தரசி (சிறுகதை) 1980 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை) 1992 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
ஒரு தந்தையின் கதை (நாவல்) 1989 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
ஒரு மகளின் கதை (குறுநாவல்) 1995 – அன்பு வெளியீடு
தமிழ் இலக்கிய ஆய்வு 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
எட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்கள் 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
பதினெண் கீழ்கணக்கு நூல்கள் 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
 

அன்புமணியின் இலக்கியப் பணியில் தன்னுடைய நூல்களை மாத்திரம் வெளியிடுவதில் கரிசனைக் காட்டாது பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், வெளியீட்டுக்கும் இவர் உதவியுள்ளார். இவரின் அன்பு வெளியீட்டகம் மூலம் வெளியிட்டுள்ள சில நூல்களின் விபரங்கள் வருமாறு:

மகோன் வரலாறு – தங்கேஸ்வரி
குள கோபடன் தரிசனம் – தங்கேஸ்வரி
நூறு வருட மட்டு நகர் அனுபவங்கள் – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
மட்டக்களப்பில் ஒரு மாமனிதர் ஜோசெப்வாஸ் – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
வாழ்க்கைச் சுவடுகள் (சுயசரிதம்) – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
நீருபூத்த நெருப்பு (நாடகங்கள்)- ஆரையூர் இலவர்
மேலும் கனடாவிலுள்ள ‘ரிப்னெக்ஸ்’ பதிப்பகத்தின் மூலமாக இலங்கையில் வரலாற்றுப் புகழ்பெற்ற பல முக்கிய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடுவதிலும் இவரின் பங்களிப்பு காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் கனடாவில் பதிப்பித்துள்ள சில நூல்களின் விபரம் வருமாறு:-

சீ. மந்தினி புராணம் – வித்துவான் ச. பூபாலலிங்கம்
மாமங்கேஸ்வர பதிகம் – வித்துவான் அ. சரவணமுத்தன்
சனிபுராணம் – வித்துவான் அ. சரவணமுத்தன்
அன்புமணி அவர்கள் களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலகட்டங்களில் சைவமாமணி விஸ்வலிங்கம் எழுதிய ‘மண்டூர் பிள்ளைத் தமிழ்’ எனும் நூலினையும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் சு. ஸ்ரீகந்தராசா எழுதிய ‘சந்ததி சுவடுகள்’ எனும் நூலினையும் ஆரையூர் நல். அலகேசமுதலியார் எழுதிய ‘ஆரையூர் கோவை’ எனும் நூலினையும் வெளியிட காரணகர்த்தாவாக இருந்துள்ளார். அதேபோல இலங்கையில் மூத்த பெண் எழுத்தாளர் ந. பாலேஸ்வரி எழுதிய ‘தத்தை விடு தூது’ எனும் நூலினையும், எஸ்.எல்.எம். ஹனீபா எழுதிய ‘மக்கத்து சால்வை’ எனும் நூலினையும் மட்டக்களப்பு செபஸ்டியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.

அன்புமணியின் கலை இலக்கிய சேவையின் இவரால் வெளியிடப்பட்ட ‘மலர்’ இலக்கிய சஞ்சிகை ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை ‘மலர்’ பத்து இதழ்கள் விரிந்தன. ஈழத்து சஞ்சிகை வரலாற்றில், ‘மலர்’ கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பல இளம் எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டிருக்கின்றது.

அன்புமணியின் நாடகப் பணியும் குறிப்பிட்டுக் காட்டக் கூடியதொன்றாகும். கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். அதே போல கல்லூரி காலத்தில் ஓரரங்க நாடகங்களிலும் இவர் பிரபல்யம் பெற்றிருந்தார். கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட நடிப்பு ஆர்வம் பிற்காலத்தில் இவரை ஒரு நடிகராக, நெறியாள்கையாளராக, நாடக ஆசிரியராக இனம்காட்டியது. இந்த அடிப்படையில் ஆரையம்பதியில் 1952ஆம் ஆண்டில் ‘மனோகரா’ எனும் பொது மேடை நாடகத்தின் முலம் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். ‘அமரவாழ்வு’, ‘ஏமாற்றம்’, ‘பிடியுங்கள் கலப்பையை’ போன்ற ஓரரங்க நாடகங்கள் இவரால் தயாரித்து, நடித்து, மேடையேற்றப்பட்ட நாடகங்களாகும்.

1962ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ‘தரைகடல் தீபம்’ எனும் நாடகப் பிரதியாக்கத்திற்கு ‘சாகித்தியமண்டலப்’ பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. பின்பு இந்நாடகம் பல இடங்களில் மேடையேற்றப்பட்டது. அதே போல இவரின் ‘சூழ்ச்சிவலை’ எனும் மேடை நாடகமும் ஜனரஞ்சகத் தன்மை பெற்றிருந்தது.

962ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் அவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டு ‘நமது பாதை’ எனும் தொடர் நாடகம் 3 மாதங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகியதன் மூலம் தனக்கென ஒரு இரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

ஒரு நடிகர், நெறியாள்கையாளர், நாடக ஆசிரியர் ஆகிய ‘அன்புமணி’ ஒரு நாடக விமர்சகருமாவார். அதுமட்டுமன்றி பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் பல நாடகப் போட்டிகளில் நடுவராகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

‘தமிழ்மணி’ – இந்து சமய விவகார அமைச்சு – 1992
வடக்கு, கிழக்கு ஆளுனர் விருது – 2001
‘கலாபூசணம்’ – 2002
‘பல்கலை வித்தகர்’ – சிந்தனைவட்டம் 2008
இவை தவிர பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட இலக்கியச் சங்கங்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தியும், கௌரவப் பட்டங்கள் வழங்கியும் கௌரவித்துள்ளன - See more at: http://www.arayampathy.com/news.php?id=2944#_

No comments:

Post a Comment