Saturday 15 July 2017

சேனையூர்



இயற்றை தன் அருட்கொடைகளினால் அள்ளித் தெளித்திருக்கும் வண்ணக் கோலம் எங்கள் சேனையூர். முல்லை, மருதம், நெய்தலொடு குறிஞ்சியின் காடுகளுடன் விரியும் அழகு நிலம் மாவலியாறும் கடலும் ஒருசேர சங்கமித்து சிற்றாறாய் பெருகி எம்மூரை வட்டமிட்டு களியோடைகளாய் காட்சிப்படும் எங்கள் ஊர் கரையோரம் எங்கும் கண்ணா மரங்களின் கூடல் கண்ணாவும் களியோடையும் எங்கள் மண்ணின் அழகின் உச்சங்கள்.

ஆற்றோரம் எங்கும் அழகிய குடியிருப்புக்கள், குடியிருப்புக்கள் தோறும் சிறிய சிறிய துறைகள். துறைகளையண்டி சேம்பும் வெருகும் விளைந்து நிற்கும் புன்னைமரங்கள் பூப்பூத்து சொரியும். பறவைகள் தங்கள்

சரணாலயமாய் கூடுகட்டி குஞ்சுகளுடன் வாழும். மந்தியொடு சிறுவன் குரங்குகள் மகிழ்ந்து விளையாடும். பின்னர் சீறிக்கொண்டு சினந்து கீச்சிடும். வில்லாய் வளைந்த கண்ணா விழுதுகள் கால்களாய் நீண்டு காடாய் பெருகும். யுத்தகாலத்தில் எத்தனை உயிர்கள் இங்கு தப்பிப் பிழைத்தன. தஞ்சமளித்த தனிப்பெரும் சோலை.
வளவுகள் ஒவ்வொன்றும் வளத்தின் சாட்சி. தென்னையும் மாவும் தேனுறு பலாவும், புன்னையும் வாழையும் வானுறு கமுகும் என்னமாய் இருக்கும். எவ்வளவு அழகு வாயில்கள் தோறும் பவளமல்லியும், நந்தியவட்டையும் செவ்வரத்தையும், வாடாமல்லியும், அடுக்குமல்லியும், நித்திய கல்யாணியும் நித்திலமாய் பாய்விரிக்கும். சேனையூர் எங்கும் அழகின் ஆட்சி.

ஒரு பிரதேசத்தின் வரலாறு என்பது வெறுமனே எழுத்தாதாரங்களுடன் மட்டுப்படுத்தப்படுவதல்ல. வரலாறு பற்றிய நவீன ஆய்வுகள் மக்கள் வாழ்வியலையும் பண்பாட்டையும் தொண்மை வரைவியல்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாயுள்ளவை. பழ மரபுக் கதைகள், நம்பிக்கைள், பாடல்கள், பழமொழிகள் என்பனவற்றின் கூட்டாக வரலாறு இன்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆபிரிக்க மக்களின் வரலாறு அண்மைக்காலங்களில் இந்த அணுகுமுறையிலேயே வரைவு செய்யப்படுகின்றன. சேனையூர் மக்களும் பல்லாயிர வருச வரலாற்றுக்கு சொந்தக்காரர்களே. இப்பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள், தமிழர் மரபைப் பேணுகின்ற நடுகற்கள், கிறிஸ்து சகாப்தத்தோடு தொடர்புடைய புராதன குளங்கள், கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள், குன்றுகளை அண்டிக் காணப்படுகின்ற மனித நாகரிகத்தின் எச்சங்கள் என்பன சேனையூரின் பழைமையை பறைசாற்றி நிற்கின்றன.
உலக நாகரிகங்கள் எல்லாமே நதிக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் களிமுகங்களிலும் முகாமிட்டு வளர்ந்துள்ளன. சேனையூரின் நாகரிகமும்
ஊற்றடியில் ஊற்றிட்டு களியோடையில் காலூன்றிய நாகரிகமாகவே வளர்ந்துள்ளது. மாவலியாறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் ஆறு சேனையூருக்கு வளம் சேர்த்து வரலாற்;றை உறுதிப்படுத்தி நிற்கிறது.
வரலாறு என்பது, புனைவு அல்ல. அது மக்கள் வாழ்வை அடையாளங்களிலும் பண்பாட்டிலும் வெளிப்படுத்த வேண்டும். சாண்டில்யன் கதைகள் எல்லாம் வரலாறு அல்ல. அவை வரலாற்று புனைவுகள். கற்பனைகள். கற்பனைகள் ஒரு போதும் வரலாறாகிவிட முடியாது. அதுபோல் இட்டுக்கட்டுவதும் வரலாறாகிவிட முடியாது.

“பரிவாரமுடனே எல்லாளன் வந்து இறங்கினான் அன்று இலங்கை துறையில்
படைகளை நகர்த்தி வருகிற போது இடையில் கண்டான் எம்மூர்தன்னை
மருத மரங்களின் விரியுடை சேனையை பெரு மன்னன் கண்டு தாகம் தணிய தண்ணீர் அருந்தி களைப்பது நீங்கி பூத்துக்குலுங்கி பூமணம் வீசி மாங்குயில் பாடி மகிழ்ந்திடும் ஊரில்
ஆற்றம் கரையில் அழகிய மருதநிழலில் களைத்து கிளைத்து கருநடை நடந்து வந்த தன் சேனை குலைந்து போகாமல் கொண்டுவந்து மருத நிழலில் வைத்தான் அன்று
மருத நிழலில் சேனையை வைத்தால் மருதடிச்சேனை எனும் பெயராயிற்று
மருதடிச்சேனை என வழங்கிய அப்பெயர் குன்றிக் குறுகி சேனையூராகி சென்றது பலகாலம் நின்று நிலைத்தது அந்தப் பெயரே” தொன் மங்களினூ டு இங்கு வரலாறு பயணிக்கிறது.

தௌ;ளு தமிழ் சொல் உச்சரிக்கும் போதே உவகை உச்சிவரை முட்டும் முன்னோர்கள்
எம் முன்னோர்க்கும் முன்னோர்கள்
வாழ்ந்து வந்த எங்கள் வளம் கொழிக்கும் கிராமம்
ஏழைகட்கு வாழ்வளிக்கும் வளத்தை வாரி தான் சுமந்து உப்பு நீர் கடலிருந்து உட்புகுந்து வளைந்து நெளிந்து
முப்புறமும் சூழ்ந்து எப்பொழுதும் அரணாக இயற்கை தந்த கொடை
பழந்தமிழ் மணம் வீச பண்பாடு சுமந்து
பண்போடு கலாசார பெருமைகாத்து முத்தமிழ் கலை வளர்த்து புத்தெழுச்சியோடு
உத்வேகம் கொண்ட உயிர்த்துடிப்புள்ள கிராமம்”
சேனையூரின் வரலாற்றையும் பண் பாட்டையும் பறைசாற்றி நிற்கிறது இக்கவிதை.

“மீகாமனுக்கு மிக்க வரம் கொடுத்து நாகமணி வாங்க நயந்தாய் அருள்தருவாய்”
வரிகள் மீகாமப் பரம்பரையினரின் இருப்பையும் வரலாற்றையும் உறுதிப்படுத்துகின்றன.
சோழப் பேரரசு இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய பொழுது, அவர்கள் செல்வாக்குக்கு உட்பட்டதாயிருந்தமையை பல சான்றுகள் நிரூபிக்கின்றன. வீரபத்திரன் கோயிலில் இன்று காணப்படுகின்ற கல் தூண்களோடு பொலநறுவை சிவாலயம் போன்ற அமைப்பு இருந்தது. அவை அகறப்பட்டு இன்று தூண்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. 1979ம் ஆண்டு இதனை ஆய்வுசெய்த பேராசிரியர் இந்திரபால இது சோழர்கால சிவன் கோயில் என்பதை உறுதிப்படுத்திச் சென்றார்.
தொடர்ந்து, போர்த்துக்கீசர் வருகை ஒல்லாந்தர் வருகை என்பனவற்றோடு சேனையூர் வரலாறு தொடர்புபடுகிறது. இவையெல்லாம் தனியனாகப் பார்க்க வேண்டிய விசயங்கள்.
ஒல்லாந்தர் இலங்கையில் ஆட்சிசெய்த பொழுது அந்தந்தப் பிரதேசத்;தில் இருந்த நிர்வாக முறைகளை உள்வாங்கிக்கொண்டு ஆட்சி செய்தனர். கோணேசர் கல்வெட்டு கொட்டியாரத்திலிருந்த ஏழூர் அடப்பன் பற்றிப் பேசுகிறது. அந்த ஏழூர்களில் சேனையூரும் ஒன்றாக இருந்திருக்கிறது. சேனையூரில் கடைசிவரை அடப்பன் முறை பயன்படுத்தப்பட்டிருந்தது. கடைசி அடப்பனாக திரு.குமாரவேலி அவர்கள் இருந்தார்கள். 1970களில் அவர் இறக்கும்வரை அடப்பன் என்றே அழைக்கப்பட்டார். உதாரணமாக விளக்கீடு நடைபெறும் நாளில் சம்பூர் பத்திரகாளி கோயிலிலிருந்து அம்மன் முகம் வீடுவீடாக காணிக்கைக்காக எடுத்துவரப்படும் போது பறை மேளத்தோடு இணைந்ததாக அந்த வரவு இருக்கும். முதலில் அடம்பனார் வீட்டுக்குச் சென்று பறையடித்துதான் காணிக்கையை தொடங்குவார்கள். இது ஒரு மரபின் தொடர்ச்சி.
பிரித்தானியர் இலங்கை வந்த பொழுது இலங்கையெங்கும் பாடசாலைகளை அமைத்தனர். மெதடிஸ்த மிசனரிமார் இந்த பணியினைச் செய்தனர். 19ம் நூற்றாண்டில் இப்பாடசாலைகள் அமைக்கப்பட்டன. அப்படி அமைக்கப்பட்ட பாடசாலையே சேனையூர் மெதடிஸ்த மிசன் பாடசாலை. (இன்றைய கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயம்)
பிரித்தானியர் காலத்திலேயே பொலிஸ் விதான் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கொட்டியாரப் பிரதேசத்தின் பழமையான புராதன கிராமங்களிலேயே இம்முறை பயன்பாட்டுக்கு வந்தது. அந்தவகையில் பொலிஸ் விதான் மருதடிச்சேனை என்ற முறைமை 1960களில் கிராமசேவையாளர் முறை அறிமுகப்படுத்தப்படும் வரை அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கடைசி பொலிஸ் விதானையாராக இருந்த திருவாளர சிவபாக்கியம் அவர்கள் வீட்டில் “பொலிஸ்விதான் மருதடிச்சேனை” என்ற அறிவிப்பு பலகையை நான் பார்த்திருக்கிறேன்.
இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளில் செப்பேடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. சேனையூர் வர்ணகுலப்பிள்ளையார் கோயில் வரலாற்றுப் பதிவை பொன்னாச்சியின் செப்பேடு உணர்த்தி நிற்கிறது. யுத்த சூழ்நிலையில் செப்பேடு காணாமல் போனாலும், இச்செப்பேடு பற்றி திருகோணமலை கோயில்களின் திருத்தல வரலாறு என்ற நூலில் பண்டிதர் வடிவேல் அவர்கள் இதனை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
சேனையூரின் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்தும் பண்பாட்டியல் அடையாளமாக சேனையூர் நாகதம்பிரான் ஆலயம், சேனையூர் வீரபத்திரன் ஆலயம், சேனையூர் சம்புக்களி பத்தினி அம்மன் ஊற்றடிப் பிள்ளையாரும் அதனோடிணைந்த புவனேஸ்வரி அம்மனும் வரலாற்றின் வழிவருவனவே.
சேனையூரில் சிறப்பாக காணப்பட்ட வதனமார் வழிபாடு ஒரு முக்கியமான பண்பாட்டடையாளம். அதனோடு வீடுதோறும் கொடுக்கப்படும் சமையல் வேள்விகள் என்பனவும் நம் கலாசார மரபுகளே.
வயல் வாழ்வோடு, இணைந்து வரும் வன்னித்தெய்வ வழிபாடு, குளக்கட்டு பத்தினி வைரவர் பொங்கல் , குளத்துமேட்டு பொங்கல் என்பனவெல்லாம் ஒரு புராதன சமூகத்தின் சமூக குறியீடுகளாய் இன்றுவரை விளங்கிச்சென்றன.
இங்கு பாரம்பரியமாய் தொடர்கின்ற வைத்திய முறைகள் பல பரம்பரையினர் இன்றுவரை இத்துறையில் தொடருகின்ற பயணம் நம் தொன்மையின் அடையாளங்களே.
பொங்கல்
, தீபாவளி எனவரும் பண்டிகைகளும் பண்டிகைகளினுடு சிறப்புப்பெறும் விளையாட்டுக்கள், விழாக்கள், கும்மி, கோலாட்டம், வசந்தன் என களி நடமிடும் கலைகள் என நீளும் நம் கலைமரபுகள்

No comments:

Post a Comment