Thursday 26 March 2020

கும்பம் என்பதோர் பெரு விழா

குலசேகரப் பட்டினம் முதல் சேனையூர் வரை

கும்பம் என்பதோர் பெரு விழா

சேனையூர் ஈழத்தின் கிழக்குக் கரையில் தமிழ் வளம் செழித்து கலைகளின் ஊற்றாய் மரபு வழி பண்பாட்டு புதையலை தனகத்தே கொண்ட தொன்மையுறு முது தமிழ் கிராமம் .
தென் ஆசிய பண்பாட்டில் முக்கிய இடம் பெற்ற பெண் தெய்வ வழி பாடு மாரியம்மனாய் வளத்துக்கும் செழிப்புக்குமான குறியீடாய் வழி வழியாய் தொடரும் கலாசார அடையாளத் தொன்மமுமும் சடங்குமாய் தொடரும் மரபார்ந்த நிலத்திடை வாழ்வு.
தமிழ் நாட்டின் தென் கோடியில் உள்ள குலசேகரப் பட்டினம் இன்று கொண்டாட்டத்தில் கலைகளின் சங்கமமாய் தமிழ் மக்கள் திரளில் குதுகலித்திருக்கிறது உலகம் முழுவதும் இருந்து இந்த விழாவை காண மக்கள் கூடியிருக்கின்றனர் .ஒன்பது நாள் தொடர்ச்சியின் பத்தாம் நாள் விழா இன்றும் நாளையும் .நாளை முடியும் போது அடுத்த வருசம் வரை அதற்காய் ஏங்கும் மனத்தோடு விடை பெறும் கலாசாரத் தொடர்ச்சி.
சேனையூரும் கும்பமும் கும்பத்து மாலும் இதனோடு தொடர்பு பட்டு நிற்கிறது எங்கிருந்தோ ஒரு வேர் தென் ஆசிய மரபோடு சேனையூரையும் இணைத்து நிற்கிறது.
கும்பம் சேனையூருக்கு பெருமை சேர்க்கும் ஒரு பண்பாட்டியல் விழா வருசம் முழுவதும் உழைப்பின் களைப்பில் இருந்தவர்களுக்கு ஒரு மன விடுதலையாய் தங்களிடம் இருந்த குரூரங்களை களையும் சடங்காக கனிந்து கிடக்கிறது .இத்தகைய சடங்குகள் உலகின் தொல் குடிகள் எல்லாவற்றிலும் காணப் படுகின்றன.
கும்பம் பல் வேறு சமூக உளவியல் சார்ந்து அதனோடு தொடர்புடைய மனித வாழ்வை பிரதி பலித்து நிற்கிறது.மனித வாழ்வில் ஏற்படும் உணர்வுகளுக்கு வடிகாலாய் அமைந்து வழிப் படுத்தி செல்கிறது.
கும்பம் ஆடுபவர்களின் மனம் மகிழ்வின் பூக்களைச் சுமந்து ஆட்டமும் பாட்டுமாய் கடந்து போக வாழ்வை எதிர் கொள்ளலில் உள்ள சிக்கல்களுக்கு ஒரு தீர்வாய் அமைகிறது. சடங்காகவும் கலையாகவும் ஒரே நேரத்தில் இரு நிலைகளில் ஒரு பண்பாட்டு பெரு விழாவாக சேனையூருக்கு பெருமை சேர்க்கும் கும்ப விழா.

No comments:

Post a Comment