Thursday 19 August 2010

திருக்கோவில்

அம்பாறை மாவட்டத்தில் தென்திசையில் அக்கரைப்பற்றிலிருந்து 8 மைல் தொலைவில் அமைந்துள்ள திருக்கோவில் எனும் திருப்பதி பல ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளை நாவற்தருவும் சுவைதரும் நீர்சுனைகளும் அமைந்துள்ள இயற்கை வளத்தோடு இயங்கியதால் வெள்ளை நாவற்பதி என்று விளங்கியதென்பர். வீரமகேந்திரபுரியை ஆட்சிபுரிந்த சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்ட வேளை சூரனை வெல்லவென்று விடுத்த வேல் அவன் மார்பைப் பிளந்து ஆகாயக் கங்கையில் நீராடி புனிதம் பெற்று திரும்பும் வழியில் வாகூர மலையை பிளந்தது என்றும் அதன் பக்கம் மூன்று குளங்களையும் அகழ்ந்து திருக்கோவில் வெள்ளை நாவல் மரத்திலே வந்து தங்கியது. காடு சுற்றிவந்த வேடுவர்கள் வெள்ளை நாவல் மரத்திலே ஒளிவீசும் தங்க வேலொன்று பிரகாசிப்பதைக் கண்டு இலை குழைகளால் கொண்டு முருகனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோவிலைத் தமிழரின் இரண்டாம் படை எழுச்சியின் போது வந்த சோழநாட்டு மன்னர்களால் தென்னிந்திய சிற்பசாத்திர முறைப்படி கல்லினாற் கட்டி முடித்தனர் என்றும் வேடரது பந்தலுக்குள் வடக்கு முகமாக வீற்றிருந்த வேலானது புதிய கற்கோவிலாலும் கிழக்கு முகமாக திரும்பிவிட்ட காரணத்தினால் `திருக்கோவில்' (திரும்பிய கோவில்) என்று பெயரிட்டனரெனவும் திருக்கோவில் பற்றிய பதிகம் கூறுகிறது.


இத்திருப்பதியிலே ஆடிமாதத்து அமாவாசைத் தினத்திலே சமுத்திர தீர்த்த உற்சவம் நடைபெறும்பொழுது ஈழமணித்திரு நாட்டின் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் பக்த கோடிகள் வந்து முருகன் அருளைப் பெறுவது பண்டைய வழக்கம். இவை மதம், குலம் என்ற பேதமின்றி எல்லா மக்களும் ஆறுமுகன் அன்பென்னும் பிணைப்பினால் `அரகர' என்று கூறும் ஒலி கீழ்த்திசைக் கடலொலி போன்று முழங்கும். இக் காலத்தில் பல பாகங்களிலுமிருந்து மெய்யடியார்கள் கூட்டம் கூட்டமாக வந்து காவடி எடுப்பதும் கற்பூரவிளக்கெடுத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற திருத் தொண்டுகள் புரிந்து முருகன் திருவருளைப் பெற்றுச் செல்வார்கள்.
மூர்த்தி,தலம், தீர்த்தம் முறையே `வணங்கினர்க்கு வார்த்தை சொல்லச் சற்குருநாதன் வாய்க்கும் பராபரமே' எனும் அருள் மொழிப்படி, மூர்த்தி ஸ்ரீ சித்திர வேலவன், தலமும் கோவிலும் திருக்கோவில், தீர்த்தம் கிழக்குத் திருக்கடல் துறையும் பெற்று வளம் பெற்றுள்ளது. ஆதிகாலம் தொட்டே தமிழ் நாடு முதல் யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலிருந்து மெய்யடியார்கள் பாதயாத்திரையாகவே பலமாதங்கள் நடந்து திருக்கோவில் முருகன் சந்நிதி தேடிவந்து தரிசித்துப் பின் கதிர்காமத்திற்குச் செல்வார்கள்.
மட்டக்களப்பு தமிழகம் எனும் நூலினைத் தந்த மகாவித்துவான் பண்டிதர் வி.சி. கந்தையா, பழைமையும் பிரசித்தமுடையதுமான முருகன் கோவில்களைத் திருப்படை கோயில்கள் என்றும் கூறுவர். பண்டைய அரசின் மதிப்பும் மானியமும் சீர்வரிசைகளும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்களாகும். திருக்கோவிலிலுள்ள ஷ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில் கிழக்கில் முதலாவது திருப்படைக் கோயிலாகும். இதனை `தேசத்துக் கோவில்' என்றும் உலகிலே திருக்கோவில் என்று சிறப்பாகக் கூறும் திருநாமம் திருச்சிற்றம்பலம் என்றும் சிதம்பரத்தையே குறிக்கும். அடுத்து இலங்கை மணித்திருநாட்டின் கிழக்குத் திசையின் பாகமாக அமைந்திருக்கும் திருமுருகன் திருக்கோட்டையாகிய இந்தத் திருக்கோவிலையே குறிக்கும். திருக்கோவிலென்ற பெயர் ஊருக்கும் கோவிலுக்கும் ஒரே பெயராக அமைந்திருக்கும் தனிப்பெருஞ்சிறப்பு ஆகும்.

No comments:

Post a Comment