Wednesday 18 August 2010

ஆரையம்பதி (

ஆரையம்பதி (Arayampathy) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள ஓர் முக்கிய ஊர் ஆகும். மட்டக்களப்பின் கல்வி களஞ்சியம் என பெருமைகொண்ட ஊர் இதுவாகும். இது கிழக்கிலங்கையில் தமிழர் செறிந்துவாழும் ஊர்களில் ஒன்றாகும். இதன் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும் தெற்கில் ஜந்தாம்கட்டை – மண்முனையும் தென்கிழக்கில் பாலமுனையும் தென் மேற்கில் மாவிலங்கைத் துறை - காங்கேயனோடையும் மேற்கில் மட்டக்களப்பு வாவியும் அமைந்துள்ளன. இவற்றுக்கிடையில் மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரையம்பதி அமைந்துள்ளது.


வரலாறு

முருகனுக்கு கோயில் எழுப்பி அறுபடை வீடுகண்டு தமிழகத்தின் பக்தியும் தமிழும் செழித்தன. இதே மரபைப் பின்பற்றி கிழக்கிலங்கையிலும் முருகனின் அறுபடை வீடுகளாக - ஆறு ஸ்தலங்கள் பாராட்டுப் பெறுகின்றன. வடக்கே வெருகல் கங்கையின் கரையில் எழுந்தருளி இருக்கும் சித்திரவேலாயுதனார் கோயில், சித்தாண்டி சித்திரவேலாயுதனார் கோயில், போரதீவு சித்திரவேலாயுதனார் கோயில், மண்டூர் முருகன் கோயில், உகந்தை முருகன் கோயில், திருக்கோவில் சித்திரவேலாயுதனார் கோயில் ஆகிய ஆறுமே அவை. கதிர்காமத்தைப் போன்றே மண்டூர் முதலிய முருகன் கோயில் திருவிழாக்களிலே வேடுவக் கன்னிப் பெண்கள் கலந்து கொள்வதும் வேடர் பூசை வேலன் வெறியாட்டம் என்பன நிகழ்வதும் வேடர்களின் தொன்மையையும் தமிழர்களுடனான பக்தி உறவையும் நிலைநாட்டும். புலிஞன், மஞ்ஞன், காத்தான், காங்கேயன் ஆகியன வேடுவப் பெயர்கள். ஆரையம்பதியின் அயலிலே அமைந்துள்ள ஊர்கள் பலவும் இப்பெயர்களினால் இன்றும் வழங்கப் பெறுகின்றன. அவ் ஊர்கள் அவ்வப்பெயர் கொண்ட வேடுவ அரசனின் பெயரால் நிலைத்துள்ளன என்பதை சுவாமி விபுலானந்தரும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆரைப்பற்றைக்குப் படுவான் கரையில் அமைந்துள்ளது வேடன்கரை. ஆரைப்பற்றைக்கு அணி சேர்ப்பது அங்கு எழுந்தருளியுள்ள முருகன் கோயில்.

 அமைவிடம்

கிழக்கிலங்கையின் தலைநகராக விளங்கும் மட்டக்களப்பிலிருந்து தென்திசையில் 4 மைல் தூரத்தில் அமைந்துள்ளது ஆரையம்பதி. இதன் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும் தெற்கில் ஜந்தாம்கட்டை – மண்முனையும் தென்கிழக்கில் பாலமுனையும் தென் மேற்கில் மாவிலங்கைத் துறை- காங்கேயனோடையும், மேற்கில் புகழ் பூத்த தேனாறாம் மட்டக்களப்பு வாவியும் அமைந்தூள்ளன. இவற்றுக்கிடையில் மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரையம்பதி அமைந்துள்ளது. அதில் மா, பலா, வாழை, தென்னை, கமுகு, ஆல், அரசு, வேம்பு, வம்மி (கடம்பு), தேத்தா ஆகிய மரச்சோலைகளுக்கிடையே இன்றும் ஆரைப்பற்றை காட்சியளிக்கிறது…
குருகுலத்தோர் தெரு, வேளாளர் தெரு, சாண்டார் (பணிக்கர்) தெரு, செங்குந்தர் தெரு, வண்ணார் தெரு, பறையர் (சாம்பான்) தெரு, பொற்கொல்லர் தெரு, ஆகிய குலப் பெயர்கள் கொண்டழைக்கப்படும் தெருக்கள் இங்கு இருக்கின்றன. அத்துடன் அலையன் குளம், ஆனைக் குளம், வண்ணான் குளம், வம்மிக் கேணி, தோணா பால் வாத்த ஓடை ஆகியன இவ்வூருக்கு நீர்வளம் சேர்க்கின்றன. அக்காலத்தில் வீடுகளில் கொட்டுக் கிணறுகள் இருந்தன. தேத்தா மரத்தின் நடுப் பகுதியைத் தோண்டியெடுத்த பின்னர் குழல்போன்ற மரக்கொட்டினை நிலத்தில் பதிப்பார்கள் கிணற்றைப் பாதுகாக்கும் கட்டுமானம் இந்தக் ‘கொட்டுக்குத்தான்’ இருக்கும்.

 பெயர்க் காரணம்

ஆரைப்பற்றை என்ற பெயர் பற்றியும் பலவாறு வழங்குவர். ஆரை+பற்றை ஸ்ரீ ஆரைப்பற்றை. ஆரை என்பது நான்கு இலைகளைக் கொண்ட ஒரு செடி. இப்பகுதியில் இச்செடி பற்றை பற்றையாக வளர்வதால் ஆரைப்பற்றை என தாவரவியல் சார்ந்து தமிழ் மரபு பேணி இப்பெயர் ஏற்படலாயிற்று என்பார் ஒரு சாரார். ஆரை என்பது நீரோடையைக் குறிக்கும் என்றும் நீரோடைகள் இங்கு நிறையக் காணப்பட்டதால் இப்பெயர் வந்ததாக இன்னொரு சாரார் கூறுவர்.
ஆரைப்பற்றை என்ற பெயரினை தற்கால இளைஞர்கள் நாகரிகமாக ஆரையம்பதியாக அழைக்கத் துவங்கினரெனச் சிலர் தவறாகக் கருதுகிறார்கள். ஆரைப்பற்றையையும் காத்தான்குடியையும் எல்லைவகுத்துச் செல்வது எல்லை வீதி. இந்த எல்லை வீதியிலே தமிழ் அடையாளம் பேண 1907 ஆம் ஆண்டு கட்டப்பெற்ற திருநீலகண்டப் பிள்ளையார் கோயிலின் மணித் தூணிலும் 1911 ஆம் ஆண்டு விநாயகர் மீது பாடப்பட்ட பதிகத்திலும், ஆரையம்பதி எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆக ஆரையம்பதி என்ற பெயரும் பல தலைமுறைகளாகவே நிலைத்து வந்துள்ளது என்பது புலனாகும். ஆரையம்பதியில் மக்கள் குடியேறிய வரலாறு மட்டக்களப்பு மான்மியம் என்ற நூலில் பதிவாகியுள்ளது. இந்நூல் மட்டக்களப்பின் வரலாற்றைச் சொல்லும் தொன்மையான நூலாகும். ஆதில் காணும் வரலாறு வருமாறு:
குலசேனன் என்கிற கலிங்க தேசத்தான் மகள் உலகநாச்சி என்பாள். இவள் தன் சகோதரன் உலகநாதனுடன் மட்டக்களப்புக்கு வந்தாள். வரும்பொழுது புத்தபிரானுடைய ‘தசனம்’ கைலைமலையில் பெறப்பட்ட ஸ்படிகலிங்கம் ஆகிய இரண்டு புனித சின்னங்களைக் கொண்டு வந்தாள். அப்பொழுது இலங்கையை மேகவண்ணன் என்கிற அரசன் அரசாண்டதாகச் சொல்லப்படுகிறது. அவ்வரசனிடம் உலகநாச்சி புத்த தசனத்தை அன்பளிப்புச் செய்தாள். ஆதனால் மகிழ்ந்த அரசன் அவள் விருப்பப்படி “மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பிரதேசத்தை” தானமாக வழங்கும்படி மட்டக்களப்புப் பகுதியை அப்பொழுது ஆண்ட தன் நண்பனான குணசிங்கனை கேட்டுக் கொண்டார் என்பர். இந்த குணசிங்கனின் காலம்
உலகுள்ளோர் புகழ்ந்து வாழ்த்த உற்றவர் விழுந்து போற்றத் தலைவனாய் எழுந்து மட்டக் களப்பில் இருந்த காலம் கலைவளர் கலியுகத்து
மூவாயிரத்து ஐந்நூறு கடந்த காலம் புலவர்கள் பாடச் செங்கோல் ஓச்சினான் புரவலன் குணசிங்கன்

என மட்டக்களப்பு மான்மியம் வரையறை செய்கிறது. மேகவண்ணனின் விருப்பத்திற்கு இணங்க குணசிங்கன் உலகநாச்சிக்கு கையளித்த பிரதேசமே மண்முனையாகும். இன்றும் மட்டக்களப்பினை அண்டிய நிர்வாக அலகுகள் மண்முனையை மையப்படுத்தியே வகுக்கப்பட்டுள்ளன. காட்டைச் செப்பனிட்டு கலிங்கத்திலிருந்து பல குடும்பங்களை வரவழைத்து அதில் குடியேற்றி அப்பகுதியிலே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிகரத்துடன் கூடிய அழகிய கோயிலும் கட்டி குளமும் கட்டி குளமும் வெட்டுவித்தாள். இந்த இடம் ‘சிகரம்’ என்றும் ‘கோயில்குளம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வுலகநாச்சி குணசிங்கனின் சகோதரனான கிரசரன் என்பவனை மணந்து கனகசேனன், வள்ளி என இரண்டு மக்களைப் பெற்று வாழ்ந்து வந்தாள். தோடர்ந்து இந்தியாவிலிருந்து உலகநாச்சியின் அழைப்பின் பேரில் வந்தோர் வாவிக்குப் படுவான்கரையில் அமைந்த காணிகளிலும் குடியேறி விவசாய வாழ்க்கையை மேற்கொண்டனர். அவர்கள் தமது வழிபாட்டுக்காக கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீசுவரர் ஆலயத்தை நிறுவினர். இந்தக் கோயிலின் சிறப்பு தேரோட்டமாகும். பெரிய தேர், சித்திரத் தேர் ஆகிய இத் தேர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறுவர். இந்தக் கோயிலின் தேர்த்திருவிழாவுடன் ஆரையம்பதி ஸ்ரீ முருகன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உறவு வரலாற்றுக் காலம் முதல் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அமைதியாகவும் இயற்கையின் அருட்கொடையால் கிடைத்த தொழில்களையும் சுகித்து வாழ்ந்த இம்மக்களுடைய வாழ்க்கையிலே போர்த்துக்கேயரின் வருகை மாறுதல்களை நிகழ்த்துவதாயிற்று. 1505 ஆம் ஆண்டில் புயல் நிமித்தம் காலியில் கால் வைத்த போர்த்துக்கேயர் கோட்டை அரசுடன் தொடர்பு வைக்கலாயினர். கோட்டை ராஜ்யம் அவர்கள் கைக்கு வந்ததும் இலங்கையின் ஏனைய பகுதிகளையும் தமது ஆட்ச்சிக்கு உட்படுத்த முனைந்தனர். யாழ்ப்பாண இராச்சிய வீழ்ச்சிக்குப் பின்னர் கிழக்கில் இருந்த தமிழ் பிரதேசங்களையும் தமது ஆட்சிக்கு உட்படுத்துவதில் தீவிரம் காட்டினர். போர்த்துக்கீசர் தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் தாம் சார்ந்த கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக இந்துக் கோயில்களை இடிக்கலாயினர். இவ்வாறுதான் உலகநாச்சியார் காலத்தில் கோயில் குளத்தில் கட்டப்பட்டிருந்த காசிலிங்கேசுவரர் போத்துக்கீசரால் கி.பி 1627 இல் உடைத்து சிதைக்கப்படலாயிற்று. கோயில்குளம் தன் பொலிவை இழந்தது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் வட திசையில் புலம் பெயர்ந்து தற்கால ஆரைப்பற்றை ஊரை நிறுவினர். போர்த்துக்கீசரால் சிதைக்கப்பட்ட ஆலயத்தில் இருந்த நிலைகள் படிக்கற்கள் கருங்கல் தூண்கள் ஆகியவற்றை கொண்டுவந்து தமது புதிய குடியிருப்பில் முருகன் கோயில் ஒன்றைக் கட்டினர். இதுவே இன்றும் ‘முருகன் கோயில்’ என்றும் ‘கந்தசாமி கோயில்’ என்றும் ஆரையம்பதி மக்களால் பாராட்டப்படுகிறது.

இக்கோயில் ஆரம்பத்தில் பிள்ளையார் கோயிலாகவே இருந்ததென்றும் காலப்போக்கில் அது முருகன் கோயிலாக மாறியதென்றும் வரலாறு உண்டு. இச்சந்தர்ப்பத்தில் மூர்த்திகள் மாறிய வரலாறு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தில் நடந்தமையும் ஒப்புநோக்கிப் பார்க்கத் தக்கது. அமிர்தகழியில் ஆரம்பத்தில் மாமாங்கேஸ்வரர் கோயிலில் ஈஸ்வரரே மூர்த்தியாக அமைக்கப்பட்டது என்றும் பின்னர் அது மாமாங்கப் பிள்ளையார் கோயிலாக மாறிற்று என்றும் கூறுவர்.

ஆரைப்பற்றையிலே கந்தசாமி கோயிலைத்தவிர பரம நைனார் ஆலயம் திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம் எள்ளுச்சேனைப் பிள்ளையார் கோயில் பேச்சிஅம்மன் ஆலயம் காளிகோயில்கள் சிவன்கோயில் கண்ணகி அம்மன் கோயில் மாரியம்மன் கோயில் ஆதிவைரவர் கோயில் ஆகிய பல கோயில்கள் வழிபாட்டுக்கு உண்டு. ஆரையம்பதியை நான்கு திசைகளிலிருந்தும் வரக் கூடிய கெட்ட ஆவிகளிலிருந்தும் பார்வைகளிலிருந்தும் பாதுகாக்கும் முகமாக வடக்கிலும் மேற்கிலும் பரம நைனார் கோயில்களும் கிழக்கில் பத்திரகாளி கோயிலும் தெற்கில் ஆதி வைரவர் கோயிலும் காவல் தெய்வங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக சொல்லுகின்றனர்.

மட்டக்களப்புப் பகுதியிலே வேளாண்மைச் செய்கை சித்திரை மாதம் வரை நீடிக்கும். அதனைத் தொடர்ந்து வைகாசி ஆனி மாதங்களில் கண்ணகி மாரியம்மன் பேச்சியம்மன் சடங்குகள் நடைபெறும். அம்மன் கோயில் சடங்கு காலங்களில் ஊருக்குள் மச்சம் மாமிசம் உண்பது தவிர்க்கப்படும். ஊர் முழுவதும் தூய்மையும் பக்தி உணர்வும் கொண்டுவிடும். வேப்பிலை வாசமும் கமுகம்பூ தாமரை ஆகிய பூக்களின் வாசமும் கற்பூர சாம்பிராணி வாசமும் ஊரை ஆக்கிரமித்து விடும். சிலம்பு உடுக்கை பறை (தவில்) ஓசையிலும் ஊரே ஒரு தெய்வீக கோலம் கொண்டு விடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே வெருகல்கங்கை முதல் தெற்கே குமுண ஆறுவரை பரந்து கிடந்தது. சுதந்திரத்திற்கு பிற்பட்ட மாறுபட்ட அரசியல் காரணங்களினால் 1963 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் ஒன்று தனியாக அதிலிருந்து கல்லியெடுக்கப்பட்டது. ஆதற்கு முன்னிருந்த நிலையை பிராமிக் கல்வெட்டுகள் ஐந்து நிர்வாகப் பற்றுக்களைக் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பினைக் குறிக்கிறன. அவையாவன (1)கோரளைப் பற்று (வாழைச்சேனை ஏறாவூர்) 2.விந்தனைப் பற்று (மகாஓயா) 3.மண்முனைப் பற்று (மட்டக்களப்பும் பிரதேசங்களும்) 4.வேகம் பற்று (இங்கினியாகல போன்றன) சம்மாந்துறை பற்று (இதனுடன் அக்கரைப் பற்றும் பானமைபற்றும் இணைத்துச் சொல்லப்படும்.) மட்டக்களப்பு பிரதேசத்தில் தமிழரும் முஸ்லிம்களும் அடுத்தடுத்த பிரதேசங்களில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். குழல் புட்டு அவிக்கும் பொழுது மாவும் இடையிடையே தேங்காய்ப் பூவும் இட்டு அவிக்கப்படுவது போல இவை அழகாக அமைந்துள்ளன என்று அக்காலப் பேச்சாளர்கள் குறிப்பிடுவது வழக்கம். இத்தகைய அமைதியை சுதந்திரத்திற்குப் பிற்பட்ட அரசியல் வாதிகள் குலைத்து விட்டமை நெஞ்சுக்கு வருத்தமாக உள்ளது.

ஆனால் ஆரைப்பற்றை முஸ்லீம் கிராமங்கள் சூழ்ந்த பழம்பெரும் தமிழ்க் கிராமமாக செழித்து வளர்ந்துள்ளது. ஆரையம்பதியைச் சுற்றி காத்தான்குடி காங்கேயன் ஓடை பாலமுனை ஒல்லிக்குளம் ஆகிய முஸ்லீம்கள் வாழும் கிராமங்கள் உள்ளன. தமிழ் கிராமத்தின் மணியோசை முஸ்லீம் கிராமங்களிலும் முஸ்லீம் கிராமங்களிலிருந்து எழும் புனித தொழுகை ஒலி தமிழ்க் கிராமங்களிலும் கேட்பது தொன்றுதொட்டு நிலவி வந்துள்ள தெய்வ பந்தமாகும்.

ஆரைப்பற்றையின் மேற்கு எல்லையாக இருக்கும் வாவி வடக்குத் தெற்காக முப்பத்திரெண்டு மைல் நீளத்திற்கு பரந்து கிடக்கின்றது. இந்த வாவி மீன் பிடிப்போருக்கு ஜீவனம் நடத்தும் வளத்தினை அளித்து வருகின்றது. மீன்பிடிப்போர், இறால்வலை வீசுவோர் நண்டுக் கூடு போடுவோர்… வாவியில் நண்டுகளுக்கு மட்டுமன்றி ஓரா மீனுக்கும் செத்தல் மீனுக்கும் கூடு வைப்பதும் உண்டு. சில காலங்களில் வாவிக் கரையில் அத்தாங்கின் மூலம் இறால் பிடிப்பதும் உண்டு. தென்னோலை மடித்து இறால் கட்டுவதும் உண்டு. மட்டுறால் பிடிக்கும் காலத்தில் இது பம்பல். எங்கள் பகுதி மக்களுக்கு அது வாவியல்ல தாய்ப்பால் !

எங்கள் பகுதியில் உள்ள தேசிய கனிகளுள் கிண்ணம்பழம் முக்கியமானது. வேறு தேசிய கனிகளும் உள. கிழக்குப்புறமாக காட்டுரோட்டை தாண்டி கால் வைத்தால் குணுக்கு குணுக்கான பற்றைக்காடுகள். எங்கள் ஊரின் தேசியக் கனித்தோட்டம் இதுதான்! நாவல், முந்திரி, ஈச்சை, கறுக்கா, காரல், துவரை, மருங்கை, சேனை, கிளா, சிமிட்டி முதலிய தேசிய கனிகள் காலத்துக்குக் காலம் பழுத்துக் குலுங்கும். கனிகளென்றில்லை எங்கழூரில் சில தேசிய மலர்களும் உண்டு. கார்த்திகைப்பூ, கணங்காப்பூ ( செண்பக மலர் ), தாமரை, திருக்கொன்றை, வம்மி, கோடைப்பூ (இது தோணாவில் வளரும் நீர்ப்பூ. பொங்கல் காலத்தில் இதற்கு பலத்த கிராக்கி). இவற்றுள் கனங்காவும், வம்மியும் பூக்கும் காலத்தில் ஊர் முழுவதும் இந்த மலர்களின் வாசனையில் நிரம்பி இருக்கும். ஆரையம்பதியின் தாவர இயலை குறிப்பிட்ட நான் இம்மண்ணுக்குரிய கீரை வகைகளையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். குமிட்டி, நத்தைச் சூரி, திராய், குறிஞ்சா, பால் குறிஞ்சா, முல்லை, முசுட்டை, முயல்பாஞ்சான், வாதமடக்கி மொசுமொசுக்கை, காரல், கானாந்தி எனப் பட்டியல் நீளும். இவற்றைச் சுவையாக ஆக்குவதற்கு எங்கள் கிராமத்திற்கென்றே தனிப் பாக முறைகள் இருந்ததாக ஆரையம்பதி தாய்க்குலம் பெருமைப்படுவதை நான் அறிவேன்.

ஆரையம்பதி மக்களின் தொழில் பன்முகப்பட்டது. தெருப் பெயர்களே சில குலத் தொழில்களைச் சொல்லும். அக்கரையில் - படுவான்கரையில் - களனி நிலம் கண்டு விவசாயம் செய்வோர் உண்டு. மீன்பிடித்தொழில் தும்புத்தொழில் - கயிறு திரித்தல், தும்பத்தடி கட்டுதல், வலை பின்னுதல், தோணி வெட்டுதல், வைத்தியம், சோதிடம், பிரம்புத் தொழில் என இப்பட்டியல் நீளமானது. ஆங்கிலக் கல்வியின் வரவாலே பயன்பெற்று உயர் அரசாங்க உத்தியோகங்களிலே அமர்ந்தும் எம் பிறந்த மண்ணுக்குப் பலரும் பெருமை சேர்க்கிறார்கள்.

எழுவானில் வங்காள விரிகுடாவும், படுவானில் மட்டக்களப்பு வாவியும் தழுவும் பிரதேசம் ஆரையம்பதி என்பது மீண்டும் அழுத்தம் பெறுவதை விரும்புவேன். கடலிலும் உப்பு நீர் வாவியிலும் உப்பு நீர். இதனாற் போலும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கும் நன்றி உணர்வு அம்மண்ணின் மைந்தருக்கு உண்டு அத்துடன் அவர்கள் ரோஷம் பாராட்டும் மானவீரர்களாகவும் வாழ்கிறார்கள்.

வரலாற்று பெருமை கொண்ட ஆரையம்பதி கண்ணகியம்மன் கோவில்

கண்ணகி வழிபாட்டில் ஈழத்தில் என்றும் சிறப்புப்பெற்று விளங்கும் பிரதேசம் கிழக்கிலங்கை என்றால் மிகை யாகாது. குறிப்பாக கிழக்கின் மட்டக்களப்பு பிரதேசத்தின் எல்லா ஊர்களிலும் இந்த அம்மன் வழிபாடு சிறப்புற்றுக் காணப்படுகின்றது. மட்டக்களப்பின் சில பகுதிகள் இன்று அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தமிழ் பிரதேசங்களில் தொன்று தொட்டு கண்ணகி வழிபாட்டை கடைப்பிடித்து வருகின்றனர்.
குறிப்பாக வைகாசி தொடங்கிவிட்டால் கிழக் கிலங்கையில் அம்மன் வழிபாடும் ஆரம்பித்து விடும் அதிலும் குறிப்பாக கண்ணகை அம்மன் வழிபாடு சிறப்புப் பெறுவது உண்டு. கிராமிய தெய்வங்களான கண்ணகி, காளி, மாரி, பேச்சி போன்ற பெண் தெய்வ வழிபாடுகள் பரவலாக காணப்பட்டபோதிலும் கண்ணகை அம்மன் வழிபாடு என்பது தனிப்பெரும் சிறப்புடன் காணப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கிழக்கிலங்கையில், தம்பிலுவில், திருக் கோயில், ஓந்தாச்சிமடம், காரைத்தீவு, புதுக்குடியிருப்பு, செட்டிபாளையம், ஆரையம்பதி, மஞ்சற் தொடுவாய் போன்ற இடங்களில் அமைந்துள்ள கண்ணகை அம்மன் ஆலயங்கள் சிறப்பு மிக்கவை.
சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி மனிதரும் தெய்வமாகலாம், என்ற மகாவாக்கியத்தின் வடிவமானவர். தன் நல்லொழுக்கத்தின் பய னால் தீயாய் மாறி தீமைகளை அழித்தவர். தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் தேவர்களையே அழைத்து நியாயம் கேட்கும் கற்பின் வலிமை கொண்டவர். இவரது வாழ்வை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாக சித்தரிக்கின்றார். சேர, சோழ பாண்டிய மூன்று நாடுகளும், மூவேந்தர்களும் சம்பந்தப்படும் இவ்விலக்கியம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.
தெய்வமாய், தீ வடிவமாய் பறங்குமலையில் நின்றபோது தேவர்களால் அழைத்துச் செல்லப் பட்டார். இதற்காக சேரன் செங்கொட்டுவன் விழா எடுத்தபோது ஏனைய அயல் நாட்டு மன்னர்களும் கலந்து கொண்டனர். இலங்கை யில் இருந்து சென்ற கண்டி அரசன் கஜபாகு மூலம் இலங்கையில் அறிமுகம் செய்யப் பட்டதே கண்ணகை வழிபாடு ஆகும்.
சிங்களவர்களால் "பத்தினித் தெய்வம்' என புகழப்படும் கண்ணகை வழிபாடு மிகவும் பக்தியும் நம்பிக்கையும் உடைய ஒன்று ஆகும். கிழக்கிலங்கையில் கண்ணகை வழிபாடு சிறப் புறக்காரணம் கண்டி அரசனுடன் கிழக்கிலங்கை கொண்டிருந்த நேரடித்தொடர்பு முக்கிய காரண மாக அமைகின்றது. இதைவிட மன்னன் கஜபாகு இந்தியாவில் இருந்து கண்ணகிக்கு விழா எடுத்த கற்களை கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்தபோது அக்கப்பல் சுழலில் அகப்பட்டு கடலில் மூழ்கியதாகவும், மன்னனும், மாலுமி களும் இயலுமானவற்றை எடுத்துக்கொண்டு கரை திரும்ப மூழ்கிய கற்கள் வேறுபட்ட வடிவில் இலங்கையின் கரையில் ஒதுங்கிய தாகவும் அவை கண்டு எடுக்கப்பட்ட இடங்களில் கண்ணகை அம்மன் வழிபாடு தோற்றம் பெற்ற தாகவும் கூறப்படுகின்றது.
பொதுவாக கண்ணகை அம்மன் வழிபாடு எட்டு நாட்கள் மற்றும் ஐந்து நாட்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். கதவு திறத்தலுடன் ஆரம்பித்து கதவடைத்தலுடன் நிறை வுறும்.
இச்சடங்கானது வைகாசித் திங்களில் (பௌர்ணமியில்) திருக்குளுர்த்தி நடைபெறும். ஊர் வழக்குக்கு ஏற்ப சில இடங்களில் இது வேறு சில நாட்களில் நடைபெறுவதும் உண்டு. இச்சடங்கு நாட்களில் பரவலாகப் பயன்படுத்தும் வார்த்தைகளாவன கதவுதிறத்தல், கல்யாணக்கால் வெட்டு தல், கல்யாணச்சடங்கு, குளிர்த்தி, நேர்திக்கடன், கதவடைத் தல், என்பனவாகும்.
கதவு திறத்தல் என்பது
இது வருடத்துக்கு ஒரு முறை மட்டும் நடைபெறுகின்ற விழா என்பதை குறிக்கின்ற ஒன்றாகும். ஏனைய நாட்களில் பூஜை வழி பாடுகள் நடைபெறுகின்ற போதிலும் மூலஸ் தானம் திறக்கப்படுவதில்லை வைகாசி மாத உற்சவத்தின் போது மட்டும் மூலஸ்தானம் (கருவறை) திறக்கப்படு வதால் இது கதவு திறத்தல் என்னும் காரணப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. இக்காலத்தில் மட்டுமே மூலஸ்தான மூர்த்திக்கு (அம்மன்) பூஜை நடைபெறும். சில ஆலயங்களில் அம்மன் வேறு கோவிலுக்கு எழுந்தருளச் செய்யப் படும். உதாரணம் ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவமி ஆலயத்தி லிருந்து அம்பாள் மிகவும் பக்தியாக கண்ணகையம்மன் ஆலயத்துக்கு எழுந்தருளச் செய்யப்படுவார். இவ்வாறு இன்னொரு ஆலயத்தில் இருந்து எடுத்துவந்து கண்ண கையம்மன் ஆலயத்தில் வைத்து விழா கொண்டாடுவதும் கதவு திறத்தல் என அழைக்கப்படும்.
கல்யாணக்கால் வெட்டுதலும் கல்யாணச் சடங்கும்
பொதுவாக ஐந்தாம் நாள் சடங்கு கல்யாணச் சடங்கு எனப்படும். இதற்கு முதல் நாள் நான்காம் நாள் கல்யாணத்துக்கான ஆயத்தங்கள் செய்யப்படும். அதில் ஒரு அம்ச மாகவே கல்யாணக்கால் வெட்டப்படும். முன் கூட்டியே திர்மானிக்கப்பட்ட பூவரசு மரத்துக்கு பூஜைகள் செய்து புனிதமான முறையில் வெட்டப்பட்டு பக்தர்களால் எடுத்து வரப்பட்டு மறுநாள் கல்யாணத்தின் போது நாட்டப்பட்டு கல்யாணம் நடைபெறும். இது கோவலனுக்கும் கண்ணகைக்கும் நடைபெற்ற கல்யாணத் தைக் குறிக்கும். கல்யாணத்தின் போது, ஊர்மக்கள் தமது வீட்டு கல்யாணமாக பாவனை செய்து ஒரு திருமணத்தின் போது என்ன என்ன சம்பிரதாயங்கள் நடைபெறுமோ அவற்றை ஆலயத்தில் செய்து மகிழ்வர்.
ஏழாவது நாள் பின்னிரவு திருக்குளிர்த்தி ஆரம்பிக்கப் பட்டு எட்டாவது நாள் அதிகாலை நிறைவு பெறும் குளுர்த்தி என்பது அம்மனை குளிர்ச்சிப்படுத்துதற்காக பாடப்படுவதாகும். மதுரையை அழித்த கண்ணகி தீ வடிவமாய் சேரநாட்டின் பறம்புமலையை அடைந்த கண்ணகியைக் கண்ட அப்பகுதி மக்கள் குரவை பாடி அம்மனின் கோபத்தை தீர்த்தனர். அப்போது தேவர்கள் ஆசீர்வதிக்க அவ்வாசிர்வாதம் மழையாகப் பொழிந்தது. இன்றும் குளுர்த்தி பாடி முடித்ததும் அல்லது, பாடும் போதும் மழை பெய்வது வழக்கம். பொதுவாக அக்கினி காலமான இன்நேரத்தில் மழை பெய்து நிலத்தை குளிரச்செய்து மக்கள் மனங்களிலும் குளிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகின்றது. இதனால் சூட்டினால் ஏற்படும் நோய்களும் குறையும். குளிர்த்தி பாடும் போது தெய்வக்காரரும் கட்டாடி மாரும் (பூசகர்) அதில் காட்டும் புனிதமும் பக்தியும் மக்களை எல்லாம் பக்திப்பரவசத்தில் மூழ்கச் செய்யும். மக்கள் குரவை செய்து அம்மனை குளிர்ச்சிப்படுத்தி தமது குறைகளைத் தீர்த்துக் கொள்வர்.
மேலே கூறப்பட்ட சடங்கு முறைகளை விட நேர்த்திக் கடன் தீர்த்தல் என்பவையும் முக்கிய மான ஒன்றாகும். இதில் ஆண்கள் காவடி எடுத்தல், பெண்கள் கற்பூரச்சட்டி எடுத்தல், என்பன சிறப்பானதாகும். இதைவிட அடியழித் தல், அங்கப்பிரதட்சனை, குழந்தை விற்றல், என்பவற் றுடன், ஆடு, மாடு, கோழி, போன்றவற்றையும் வேறு பெறுமதியான பொருட்களையும் ஆலயத்துக்கு கொடுத்து தமது கடமைகளை நிறைவேற்றுவதும் விசேட அம்ச மாகும். காவடி எடுக்கும் போது காவடிச் சிந்து பாடுவர். இது கண்ணகையின் வாழ்க்கை வரலாறுகளை சுவைபட கூறுவதாக அமையும். உதாரணம்:
ஆரையம்பதி தனிலே அமர்ந் திருந்து அடியவர்க்கு அருள் புரிய வேண்டுமென்று குலமகளாம் கோவலனின் பழியைப் போக்க தேவி கண்ணகையே அருள் செய்தாயே! இங்கு கருப்பொருள் கோலவனின் பழி தீர்த்தல் என்பது பொதுவான ஒன்று. ஆனால் "ஆரையம்பதிதனிலே' என்பது ஆலயம் அமைந்துள்ள இடத்தைக்குறிக்கின்றது. இவ்வாறு பாடல்கள் காவடிச் சிந்து முறையில் இயற்றப்பட்டிருக்கும். இதைவிட அம்மனின் வரலாறுகள் பொதுவானது. பூஜை நாட்களில் இரவு பகலாக படிக்கப்படும். ஊருக்கூர் மேலே கூறப்பட்ட பாடல்கள் ஊர்ப்பெயரில் எழுதப்பட்டிருக்கும்.
பூஜை முறை
பூஜைகள் கிராமிய வழிபாட்டு முறை சார்ந்ததாக அமைந்திருக்கும். இதில் ஆகம மந்திரங்கள் பெரியளவில் உச்சரிக்கப்படாதபோதிலும் கிராமிய ஆண், பெண் தெய்வங்களுக்கான மூல மந்திரங்கள் முக்கியத்துவம் பெறும். பரம்பரை பரம்பரையாக இம்மந்திரங்களை ஓதுவோர் பரிவார மூர்த்திகளுக்கான பூஜை ,தெய்வங் களுக்கான திருப்திப்படுத்தல் போன்ற செயற்பாட்டில் ஈடுபடுவர். பிரதம பூசகர் கருவறைப் பூஜை மற்றும், பரிவார மூர்த்திகளை ஆவாகனம் செய்தல் போன்ற வற்றில் ஈடுபடுவார். தியான சுலோகம் என்பவற்றுடன் தமிழ் மொழி மூலமந்திரம், மூலமந்திரங்களும் இங்கு முக்கியத் துவம் பெறுகின்றது.
ஆரையம்பதி கண்ணகையம்மன் ஆலயத்தைப் பொறுத் தவரை ஏறக்குறைய இருநூறு ஆண்டு பழைமை வாய்ந்தது. இது பற்றிய பல செவி வழிக்கதைகள் உண்டு இருந்த போதியலும் அம்மன் ஆரையம்பதியின் எல்லைப் புறமான தாழங்குடா என்னும் இடத்தில் நிலை கொண்டிருந்த தாகவும், பின் இது மக்களின் இடம் பெயர்வு காரணமாக ஆரையம்பதியின் மத்திய பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இன்றுள்ள இடத்தில் ஆலயம் ஒன்று அமைக்கப் பட்டு வழிபடப்பட்டு வருகின்றது.
இது இன்று விசாலமான மண்டபத்துடன் புதுப்பொலிவு பெற்று நல் இயற்கைச் சூழலுடன் மிகச்சிறப்பாக காணப்படுகின்றது. ஆனால் கருவறை எப்படி ஆரம்பிக்கப் பட்டதோ அப்படியயே உள்ளது அதை மாற்றி அமைப்ப தற்கான உத்தரவு கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. பரம்பரை, பரம்பரையாக வந்த பூசகரே பூஜையில் ஈடுபடு கின்றார். மிகவும் பக்தியும், நம்பிக்கையும் மிகுந்ததாக இந்த பூஜை முறைகள் காணப்படும். கதவு திறந்தது முதல் கதவடைக்கும் வரை மக்கள் மிகவும் பக்தியாவும் சுத்த மாகவும் சைவ போசனிகளாக வாழ்வர். இச்சடங்கு காலத் தில் வெளியூர்களில் வேலை செய்வர்கள் எல்லோரும் ஊரில் வந்திருந்து வழிபாட்டில் ஈடுவடுவதும் மகிழ்ச்சியாக குடும்பங்களுடன் இருப்பதும் சிறப்பம்சமாகும். பொதுவாக தமது ஊரும் மக்களும் நோயின்றி வாழ்வதும் பாதுகாப்பாக இருப்பதும். மாணவர்களின் படிப்பும் இக் கண்ணகையம்மன் வழிபாட்டால் சிறப்புற்று வருவது என்பதில் இவ்வூர் மக்கள் உறுதியாக உள்ளனர்

No comments:

Post a Comment